சூப்பர்!! தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா.. 11 மாவட்டங்களில் இரட்டை இலக்கில் வைரஸ் பரவல்
சென்னை: தமிழ்நாட்டில் 3ஆவது நாளாகத் தினசரி கொரோனா பாதிப்பு 1000க்கும் கீழாகப் பதிவாகியுள்ள நிலையில், 11 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு இரட்டை இலக்குகளில் மட்டுமே பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்தே வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
மாநிலத்தில் தற்போது நவ. 15ஆம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பாதிப்பு தொடர்ந்து கட்டுக்குள்ளேயே உள்ளது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,907 பேருக்கு கொரோனா.. 251 பேர் பலி!
தினசரி கொரோனா பாதிப்பு
இன்று தொடர்ந்து 3ஆவது நாளாகத் தமிழ்நாட்டில் 1000க்கு கீழ் பதிவாகியுள்ளது. சுமார் 200 நாட்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் (அக். 1) தினசரி வைரஸ் பாதிப்பு 990ஆகக் குறைந்தது. அதைத் தொடர்ந்து நேற்று 973 பேருக்கு வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில், இன்றும் வைரஸ் பாதிப்பு மேலும் குறைந்துள்ளது. இன்று மொத்தம் 1.15 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 962 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 27,05,548 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
பாசிட்டிவ் விகிதம்
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பாசிட்டிவ் விகிதம் 0.8%ஆக உள்ளது. இது மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவாகும். அதிகபட்சமாக்கச் சேலம் மற்றும் திருப்பூரில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 1.4%. ஆக உள்ளது. அதேபோல தலைநகர் சென்னையில் பாசிட்டிவ் விகிதம் 0.6%ஆகவும் கோவையில் 1.2% ஆகவும் உள்ளது.
கொரோனா உயிரிழப்புகள்
தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 6 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 13 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். அதிகபட்சமாகத் தலைநகர் சென்னையில் 3 பேரும் மதுரை, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தலா 2 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில் 36,176 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
ஆக்டிவ் கேஸ்கள்
புதிய கொரோனா பாதிப்பு குறைவதால் ஆக்டிவ் கேஸ்களும் தொடர்ந்து குறைகிறது. நேற்று 11,147ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை இன்று 11,012ஆகக் குறைந்துள்ளது மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 1,078 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 26,58,360 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக பாதிப்பு
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலுமே கொரோனா கட்டுக்குள்ளேயே உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோவைத் தவிர வேறு எந்த மாவட்டத்திலும் வைரஸ் பாதிப்பு 100ஐ தாண்டவில்லை. அதிகபட்சமாகக் கோவையில் 109 பேருக்கும் தலைநகர் சென்னையில் 105 பேருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதேபோல செங்கல்பட்டில் 82 பேருக்கும் ஈரோட்டில் 69 பேருக்கும் திருப்பூரில் 66 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மாவட்டத்தில் அரியலூர், திண்டுக்கல், மயிலாடுதுறை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, திருப்பத்தூர், விருதுநகர் என 11 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 10க்கு கீழ் குறைந்துள்ளது.