ஆட்டம் போடும் கொரோனா... 11 ஆயிரத்தை நெருங்கும் தினசரி பாதிப்பு.. உச்சத்தில் ஆக்டிவ் கேஸ்கள்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் 75 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில வாரங்களாகவே மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மெல்ல அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 10 ஆயிரத்தைக் கடந்திருந்தது.
18 வயதை கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி.. மே 1 முதல் போட்டுக்கொள்ளலாம்.. மத்திய அரசு அறிவிப்பு
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
11 ஆயிரத்தை நெருங்கும் ஆக்டிவ் கேஸ்கள்
இருப்பினும், மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தினசரி வைரஸ் பாதிப்பு தற்போது 11 ஆயிரத்தை நெருங்குகிறது. நேற்று 10 723 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 25 பேர் வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு
இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் தற்போது வரை 10,02,392 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாநிலத்தில் 1,11,590 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா உயிரிழப்பு
மேலும், ஒரே நாளில் தனியார் மருத்துவமனைகளில் 22 பேர் அரசு மருத்துவமனைகளில் 22 பேர் என மாநிலத்தில் 44 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் கொரோனா உயிரிழப்பு 13,157ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாநிலத்தில் 6,172 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
ஆக்டிவ் கேஸ்கள்
தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் தற்போது சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 75 ஆயிரத்தைக் கடந்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது 75,116 பேர் கொரோனா காரணமாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்டிவ் கேஸ்கள் அதிகரிப்பதால் மாநிலத்திலுள்ள சுகாதார துறை கட்டமைப்பில் பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இது குறித்தும் சுகாதார துறையினர் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் என்ன நிலை
தலைநகர் சென்னையில் அதிகபட்சமாக 3347 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் 1934 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர், 15 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 970 பேருக்கும் கோவையில் 735 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.