தமிழகத்தில் 21 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு.. கூடுதல் கட்டுப்பாடுகள் பலன் தருமா?
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 21,228 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் தற்போதுள்ள ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் 1.25 லட்சத்தைக் கடந்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெறும் 15 நாட்களில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
அதேபோல மாநிலத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு நேற்று கூடுதல் கட்டுப்பாடுகளையும் அறிவித்திருந்தது.

21 ஆயிரத்தை கடந்த தினசரி பாதிப்பு
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று 21 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 1,40,512 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதில் 21,228 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 34 பேர் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பியவர்கள். இதன் மூலம் மாநிலத்தில் தற்போது வரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,49,292ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா உயிரிழப்பு
தமிழகத்தில் நேற்று 122 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், இன்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 144ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 86 பேர், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 58 பேர் என மொத்தம் 144 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா காரணமாக 14,612 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
தமிழ்நாட்டில் கொரோனா காரணமாகச் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1.25 லட்சத்தைக் கடந்துள்ளது. நேற்று மாநிலத்தில் 1,23,258 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 1,25,230ஆக உயர்ந்துள்ளது. அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பிலிருந்து 19,112 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மாநிலத்தில் 11,09,450 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தலைநகரில் உச்சத்தில் கொரோனா
குறிப்பாகத் தலைநகர் சென்னை கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது. ஒரே நாளில் சுமார் 6228 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல சென்னையில் ஒரே நாளில் 36 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தலைநகரில் தற்போது 33,222 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் 5840 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னைக்குத் தவிர செங்கல்பட்டு, கோவை ஆகிய மாவட்டங்களிலும் வைரஸ் பாதிப்பு 1000ஐ கடந்துள்ளது.












Click it and Unblock the Notifications