தமிழகத்தில் 17 ஆயிரத்திற்கும் கீழ் சென்ற ஆக்டிவ் கேஸ்கள்.. தினசரி பாதிப்பில் இன்று சென்னைதான் மோசம்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தலைநகர் சென்னையில் அதிகபட்சமாக 189 பேருக்கும், கோவையில் 173 பேருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரரோனா 2ஆம் அலையைத் தொடர்ந்து கடந்த மே மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதல் இரண்டு வாரங்களுக்குத் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னரே வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியது.
தொடர்ந்து நிலைமைக்கு ஏற்றபடி ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. தற்போது மாநிலத்தில் செப். 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும் வைரஸ் பாதிப்பைக் கருத்தில் கொண்டு கூடுதலாக கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பு
ஊரடங்கிற்குப் பலன் தரும் வகையில் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,512 கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 1,51,012 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 1,512 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 26,14,872 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாசிட்டிவ் விகிதம்
தமிழகத்தில் இன்று கொரோனா பாசிட்டிவ் விகிதம் 1ஆக உள்ளது. அதிகபட்சமாக நாகை மாவட்டத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 2ஆக உள்ளது. தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 1.9ஆகவும் அரியலூர் மற்றும் கோவையில் 1.8ஆகவும் உள்ளது. இவை தவிரத் தர்மபுரி, ஈரோடு, மயிலாடுதுறை, நாமக்கல், நீலகிரி, திருவாரூர், திருப்பூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் மாநில சராசரியைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. தலைநகர் சென்னையில் பாசிட்டிவ் விகிதம் 0.8ஆகவே தொடர்கிறது.

கொரோனா உயிரிழப்புகள்
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் மொத்தம் 22 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 16 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 6 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இன்று உயிரிழந்தவர்களில் 6 பேர் எவ்வித இணை நோய்களையும் கொண்டிருக்காதவர்கள், 4 பேர் 50 வயதுக்குக் குறைவானவர்கள் ஆகும். அதிகபட்சமாகக் கோவை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் தலா 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல சென்னை மற்றும் திருப்பூரில் தலா 2 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 34,921 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
தமிழ்நாட்டில் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்திற்கும் கீழாகக் குறைந்துள்ளது. நேற்று 17085 ஆக ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை இன்று 16,850ஆக குறைந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,725 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், ஒட்டுமொத்தமாக இதுவரை 25,63,101 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு
மாவட்ட வாரியான பாதிப்பில் பல வாரங்களுக்குப் பிறகு கோவையைக் காட்டிலும் சென்னையில் தினசரி வைரஸ் பாதிப்பு அதிகமாகப் பதிவாகியுள்ளது. கோவையில் இன்று 173 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் இன்று 189 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல ஈரோட்டில் 141 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 3 மாவட்டங்களில் மட்டும் தினசரி பாதிப்பு 100ஐ கடந்துள்ளது












Click it and Unblock the Notifications