தமிழகத்தில் 21ஆவது நாளாக தொடர்ந்து குறையும் கொரோனா.. கூடுதல் தளர்வுகளால் கேஸ்கள் அதிகரிக்குமா?
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர், அதேபோல இன்று மட்டும் மொத்தம் 1259 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் முதலே கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. முதலில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், கொரோனா குறையக் குறைய ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இந்தச் சூழலில் இன்று முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி வார இறுதி நாட்களில் கோயில்களை திறக்க அனுமதி அளித்துள்ளது, தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

தினசரி கொரோனா பாதிப்பு
அதன்படி இன்று 21ஆவது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இன்று தமிழ்நாட்டில் மொத்தம் 1,37,423 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் மொத்தம் 1,259 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் மொத்தம் 26,83,396 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாநிலத்தின் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் 0.9% ஆகவே நீட்டிக்கிறது. தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் பாசிட்டிவ் விகிதம் 2ஐ தொடவில்லை. அதேநேரம் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 1.7% ஆக உள்ளது. தலைநகர் சென்னையில் பாசிட்டிவ் விகிதம் மாநில சராசரியைவிடக் குறைவாக 0.8%ஆக உள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்
இது தவிர இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 83 பேர் 12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் ஆவர். அதேபோல கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் 12 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 8 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். அதிகபட்சமாகச் சென்னையில் 4 பேரும் கோவை, சேலம், மயிலாடுதுறை, திருப்பூர் மாவட்டங்களில் தல 2 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
மாநிலத்தில் ஆக்டிவ் கேஸ்களும் தொடர்ந்து குறைந்தே வருகிறது. நேற்று மாநிலம் முழுவதும் 15,650 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 15,451ஆகக் குறைந்துள்ளது. மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 1,438 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், இதுவரை தமிழ்நாட்டில் 26,32,092 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு
மாவட்ட வரியான கொரோனா பாதிப்பில் கடந்த சில வாரங்களாகவே சென்னை தான் முதல் இடத்தில் உள்ளது. இன்று தலைநகர் சென்னையில் மொத்தம் 163 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல கோவையில் 143 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டில் 95 பேருக்கும், ஈரோட்டில் 79 பேருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னை, கோவை ஆகிய 2 மாவட்டங்களில் மட்டுமே இன்று வைரஸ் பாதிப்பு 100ஐ கடந்துள்ளது. இன்று கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பாதிப்பு வரும் காலத்தில் எங்கு அதிகரிக்குமோ என்றும் அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications