தமிழகத்தில் 20ஆவது நாளாக தொடர்ந்து குறையும் கொரோனா.. இதே நிலை பண்டிகை காலத்திலும் தொடருமா?
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 1280 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்தே வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. 2ஆம் அலை உச்சத்தில் இருந்த சமயத்தில் முழு ஊரடங்கு போடப்பட்டிருந்தது. கொரோனா கட்டுக்குள் வர வர ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
புலி வருகிறது கூடலூர் நோக்கி.. 8 நாட்களுக்கு பிறகு.. கேமராவில் பதிவானது.. கிராம மக்களுக்கு வார்னிங்
இந்தியாவில் விரைவில் பண்டிகை காலமும் தொடங்கும் நிலையில், எங்கு வைரஸ் பாதிப்பு அதிகரிக்குமோ என்று அஞ்சப்பட்டது. இருப்பினும் கூடுதல் தளர்வுகளால் வைரஸ் பாதிப்பு மாநிலத்தில் அதிகரிக்கவில்லை.
தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் இன்றும் 20ஆவது நாளாக வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. இன்று தமிழ்நாட்டில் மொத்தம் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் ஐக்கிய அமீரகத்தில் இருந்து திரும்பிய ஒருவர் உட்பட மொத்தம் 1,280 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் மொத்தம் 26,82,137 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாநிலத்தின் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் 0.9%ஆகவே நீட்டிக்கிறது. அதிகபட்சமாகக் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 1.8% ஆக உள்ளது. அதைத் தொடர்ந்து நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் பாசிட்டிவ் விகிதம் 1.6% ஆக உள்ளது. தலைநகர் சென்னையில் பாசிட்டிவ் விகிதம் மாநில சராசரியைவிடக் குறைவாக 0.8%ஆக உள்ளது.
கொரோனா உயிரிழப்புகள்
அதேபோல கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 19 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் 15 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 4 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். அதிகபட்சமாகக் கோவையில் 3 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதைத் தொடர்ந்து தர்மபுரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் 2 பேரும் வைரசால் பலியாகியுள்ளனர். தலைநகர் சென்னையில் ஒருவர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
ஆக்டிவ் கேஸ்கள்
கொரோனாவால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து கட்டுக்குள் இருந்து வருகிறது. நேற்று மாநிலம் முழுவதும் 15,852ஆகப் பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 15650ஆகக் குறைந்துள்ளது. மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 1453 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், இதுவரை தமிழ்நாட்டில் 26,30,654 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட வாரியாக பாதிப்பு
மாவட்ட வரியான கொரோனா பாதிப்பில் இன்று தலைநகர் சென்னை தான் மோசமாக உள்ளது. தலைநகர் சென்னையில் இன்று மொத்தம் 173 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல கோவையில் 145 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டில் 98 பேருக்கும், ஈரோட்டில் 82 பேருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னை மற்றும் கோவை மாவட்டத்தில் மட்டுமே இன்று வைரஸ் பாதிப்பு 100ஐ கடந்துள்ளது.