TNEA 2020 : பொறியியல் படிப்பு கலந்தாய்வு: இன்று மாலை 6 மணி முதல் விண்ணப்பிக்கலாம்! எப்படி?
சென்னை: பொறியியல் படிப்புகளுக்கு இன்று மாலை 6 மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அறிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக இதுவரை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதனால் பொறியியல் படிப்பு உள்பட அனைத்து வகையான உயர் கல்வி படிப்புகளுக்கும் விண்ணப்பிப்பது உள்ளிட்ட எந்த பணிகளும் இதுவரை தொடங்கவில்லை.

இந்த நிலையில், இன்று மாலை 6 மணி முதல் http://tneaonline.in/ என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அறிவித்துள்ளார்.
இன்று மாலை 6 மணிக்கு தொடங்கி வரும் ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி (16.8 .2020) மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். விண்ணப்பத்திற்கான கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார். 465 பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ள நிலையில் விரும்பும் கல்லூரிகளில் சேர வேண்டும் எனில் இன்று முதல் மாணவர்கள் http://tneaonline.in/ விண்ணப்பிக்கலாம்.

செப்டம்பர் 17 முதல் பொறியியல் கவுன்சிலிங் நடைபெறும் என்றும், அக்டோபர் 15க்குள் பொறியியல் கவுன்சிலிங்கை முடிக்க அனைத்து ஏற்பாடுகள் தயாராக உள்ளது என்றும் அமைச்சர் கேபி அன்பழகன் பேட்டியின் போது தெரிவித்தார். கல்லூரிகளை இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என்றும் அமைச்சர் கூறினார்.
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை கடந்த சில ஆண்டுக்கு முன்பு வரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது. ஆனால் தற்போது தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் நடத்தி வருகிறது. ஆன்லைனிலேயே கலந்தாய்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications