"உலக முதலீட்டாளர்களுக்காக.." என கூறி திடீரென ஆங்கிலத்தில்.. பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கிய பிடிஆர்
சென்னை: அமைச்சர் பிடிஆர் தனது பட்ஜெட் உரையைத் தமிழில் வாசித்து வந்த நிலையில், திடீரென உலக முதலீட்டாளர்களுக்காக உரையாற்றுவதாகக் கூறி சில பத்திகளை ஆங்கிலத்தில் வாசித்தார்.
Recommended Video
தமிழ்நாட்டில் 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமைச்சர் பிடிஆர் முதல்முறையாக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடப்பு ஆண்டுக்கான 2022-23 முழுமையான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறது. இதனால் பட்ஜெட் மீது மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முக்கிய அறிவிப்புகள்
இன்று காலை நிதியமைச்சர் பிடிஆர் தனது பட்ஜெட் உரையைத் தாக்கல் செய்யத் தொடங்கிய போதே அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அமைச்சர் பிடிஆர் தனது உரையைச் சற்று நேரம் நிறுத்தினார். அதிமுகவினர் வெளிநடப்பு செய்த பின்னர், பிடிஆர் தனது பட்ஜெட் உரையைத் தொடர்ந்தார். இந்த பட்ஜெட் அறிவிப்பில், அவர் பல முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அரசுப் பள்ளி மாணவிகள் ரூ 1000 உதவித் தொகை உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகளை அவர் இந்த பட்ஜெட் உரையில் வெளியிட்டார்.

உலக முதலீட்டாளர்களுக்கு
அப்போது அவர், "இன்று இந்தியாவிலேயே முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது. இங்கு மாநிலத்தின் நிதிநிலை குறித்து சில குறிப்புகளை ஆங்கிலத்தில் உரையாற்றுகிறேன். இது தேசிய மற்றும் சர்வதேச பத்திரிக்கை மற்றும் முதலீட்டாளர்களிடம் சேரும் என்பதால் சில பத்திகளை மட்டும் ஆங்கிலத்தில் படிக்கிறேன்" என்று கூறி திடீரென ஆங்கிலத்தில் தனது பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார்.

ஆங்கிலத்தில் உரை
தமிழக அரசின் நிதிநிலை தொடர்பாக சில பத்திகளை மட்டும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆங்கிலத்தில் வாசித்தார். அப்போது அதன் தமிழாக்கம் சட்டசபையில் எம்எல்ஏக்களுக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த திரையில் வந்தது. இதில் அவர் மாநிலத்தின் நிதிநிலை குறித்து முக்கிய குறிப்புகளைக் குறிப்பிட்டார். கொரோனா பெருந்தொற்று, வரி வருமானம் குறைவு ஆகியவை குறித்து அவர் குறிப்பிட்டார்.

செலவினங்களை குறைத்த தமிழக அரசு
அதில் கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் நல்வாழ்வு பாதிக்கப்பட்டிருந்ததாகவும் இதனால் அவர்களுக்கு உதவும் வகையில் மக்கள் நலன் சார்ந்து பல முக்கிய திட்டங்களை முன்னெடுத்தால் செலவுகள் அதிகரித்ததாகவும் தெரிவித்தார். இருப்பினும், தமிழக அரசு தனது பிறகு செலவினங்களைக் குறைத்தது. பெருந்தொற்று காரணமாக அரசின் வரி வருவாயும் பெரியளவில் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications