ஒரே குடும்ப அட்டையில் பல கூட்டுறவு வங்கிகளில் முறைகேடாக நகைக் கடன்.. சாட்டையை சுழற்றிய தமிழக அரசு
சென்னை: கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் உட்பட்டு நகைக் கடன் பெற்றிருக்கும் தகுதி வாய்ந்தவர்களுக்கு அந்த நகைக் கடன்தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கடந்த முறை ஆட்சியில் இருந்த அதிமுக கடைசி நேரத்தில் நகைக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி வந்தது. எனினும் நகைக் கடன் தள்ளுபடி குறித்து அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.

அதிமுக ஆட்சி
அதிமுக ஆட்சியில் நகைக் கடன் ரத்தில் மோசடி குறித்து திமுக ஆட்சியில் ஆய்வு செய்யப்பட்டு வந்ததாகவும் விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி அறிவித்திருந்தார். இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதி நாளன்று கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள்பட்ட நகைக் கடன்கள் தகுதிவாய்ந்தவர்களுக்கு ரத்து செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

கண்டறியும் பணி
இதையடுத்து தகுதி வாய்ந்தவர்கள் யார் என்பதை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஒரே ரேஷன் அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் பல கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற்றது தெரியவந்தது. அந்த வகையில் அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஒரு சுற்றறிக்கையை விடுத்துள்ளார்.

நகைக் கடன்
அந்த அறிக்கையில் தமிழகத்தில் முறைகேடாக நகைக் கடன் பெற்றவர்களிடம் பணத்தை வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நகைக் கடன் தவணை தவறி இருப்பின் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை பின்பற்றி தொகையை வசூலிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

5 சவரன் நகைக் கடன்
ஆதார் கார்டு, ரேஷன் கார்டு அடிப்படையில் 5 சவரனுக்கு மேல் நகைக் கடன் பெற்றவர்களின் பட்டியலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 5 சவரனுக்கு மேல் நகைக் கடன் பெற்றவர்களிடம் இருந்து நகைக் கடன்களை வசூல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நகைக் கடன்களின் தவணையை கட்ட தவறியவர்கள் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

உறுப்பினர்கள்
ஒரே குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் பல கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற்றிருந்தால் அவர்களுக்கு நகைக் கடனில் தள்ளுபடி இல்லை. அது போல் விதிகளை மீறி பெறப்பட்ட நகைக் கடன்களை வசூலிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளதாக அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நகைக் கடன்கள் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்துக்கு 5 பவுனுக்குள் இருக்கும் நகைக் கடன்கள் தகுதிகளின் கீழ் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும்.












Click it and Unblock the Notifications