தமிழக தென் மாவட்ட கடலோர மண்ணை கபளீகரம் செய்த கம்பெனிகள்! ஹைகோர்ட்டில் தாக்கலாகிறது லேட்டஸ்ட் அறிக்கை
சென்னை: தாது மணல் கொள்ளை தடுப்பு விவகாரத்தில் சமீபத்திய அறிக்கை தயாராக இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் தாக்கல் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் வி.வி.மினரல், டிரான்ஸ்வேர்ல்ட் கார்னெட், பீச் சேண்ட் மைனிங் உள்ளிட்ட நிறுவனங்கள் தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக கூறி, அதை தடுக்கக் கோரி கடந்த 2015-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

அந்த வழக்கில், கடந்த ஆண்டு (2022 பிப்ரவரி மாதம்) தமிழ்நாடு அரசின் தொழில் துறை சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், தாதுமணல் எடுப்பதற்காக ஏழு நிறுவனங்களுக்கு, திருநெல்வேலியில் 52 உரிமங்கள், தூத்துக்குடியில் 6, கன்னியாகுமரியில் 6 என, 64 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோதமாக தாது மணல் எடுக்கப்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து தாது மணல் எடுப்பதற்கு கொண்டு செல்வதற்கும் 2013-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தடை விதிக்கும் முன்பும், தடை விதித்த பிறகும், சட்டவிரோதமாக தாதுமணல் எடுத்ததால் ஏற்பட்ட 5 ஆயிரத்து 832 கோடியே 44 லட்சம் ரூபாய் இழப்பை, தனியார் தாது மணல் ஏற்றுமதியாளர்களிடமிருந்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தனியார் நிறுவனங்கள் வசம் உள்ள ஒரு கோடியே 55 லட்சம் டன் தாது மணலை பறிமுதல் செய்து மத்திய அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது.
தாது மணல் கொள்ளை குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி மற்றும் சத்யபிரதா சாஹு தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு குழுக்கள் அளித்த அறிக்கையில், மூன்று மாவட்டங்களிலும் 234 ஹெக்டேர் பரப்பில் ஒரு கோடியே ஒரு லட்சம் டன் தாது மணல் சட்டவிரோதமாக எடுக்கபட்டதும், ஒரு கோடியே 55 லட்சம் டன் இருப்பில் உள்ளதும் தெரியவந்துள்ளது என்றும் அந்த பதில் மனுவில் கூறப்பட்டு இருந்தது. மேலும், இருப்பில் உள்ள ஒரு கோடியே 55 லட்சம் டன் தாது மணலை மத்திய அரசு நிறுவனத்திடம் ஒப்படைக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தாத்தார், இந்த விவகாரத்தில் சமீபத்திய நிலவரப்படி அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், அது மூன்று நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என உறுதி அளித்தார்.
தமிழ்நாடு அரசின் விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள், இதேபோன்ற கோரிக்கைகளுடன் தொடரப்பட்ட மற்ற வழக்குகளுடன், இந்த வழக்கையும் விசாரிப்பதாக கூறி, வழக்கின் விசாரணையை டிசம்பர் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications