இனி தமிழில்தான் இனிஷியல் போட வேண்டும்.. பள்ளி கல்லூரிகளுக்கு பறந்த அரசின் உத்தரவு.. முழு விபரம்!
சென்னை: பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் பெயர்களை ஆவணங்களில் எழுதும் போது தமிழில்தான் எழுத வேண்டும். அதேபோல் இனிஷியல் எனப்படும் முதல் எழுத்தையும் தமிழில்தான் எழுத வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கும் இதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்திலும் பெயர்களை எழுதும் போது தமிழிலேயே எழுத வேண்டும் என்று முன்பில் இருந்தே அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் வெளியிடப்பட்டது.
இதையடுத்து தமிழ் வளர்ச்சி இயக்குனரகம் சார்பாக தமிழில் பெயர்களை எழுதுவது தொடர்பான அறிவுறுத்தல் சமீபத்தில் தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்டது. அதில் பல்வேறு பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டது.

பரிந்துரை
தமிழ் வளர்ச்சி இயக்குனரகம் சார்பாக செய்யப்பட்ட பரிந்துரையில், அரசு அலுவலகங்கள் தங்கள் பெயர்களை தமிழில் எழுத வேண்டும். இதற்கான சட்டம் ஏற்கனவே இருக்கிறது. தமிழ்நாடு ஆட்சி மொழி சட்டத்தின் ஒரு விதியாக இது உள்ள போதிலும் பல அரசு அலுவலர்கள் இதை கடைபிடிப்பது இல்லை. அதேபோல் பள்ளி, கல்லூரிகளிலும் மாணவர்களின் பெயர்களின் முன்னெழுத்துக்கள் தமிழில் எழுதப்படுவது இல்லை.

அவசியம்
அரசு அலுவலகங்களில் அரசு அலுவலா்கள், பணியாளா்கள் அனைவரும் தமிழிலேயே கையெழுத்திட வேண்டுமென அரசாணை உள்ளது. இதை உடனே அலுவலகங்களில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். முதல்வர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை இதை பின்பற்ற வேண்டும் என்று தமிழ் வளர்ச்சி இயக்குனரகம் சார்பாக செய்யப்பட்ட பரிந்துரையில் குறிப்பிடப்பட்டது.

ஏற்பு
இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டு தமிழ்நாடு அரசு தனது அறிவுறுத்தலை அனுப்பி உள்ளது. அதன்படி, பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் பெயர்களை ஆவணங்களில் எழுதும் போது தமிழில்தான் எழுத வேண்டும். அதேபோல் இனிஷியல் எனப்படும் முதல் எழுத்தையும் தமிழில்தான் எழுத வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆவணங்கள் அனைத்திலும் தமிழ் இனிஷியல் மற்றும் முழு பெயர் தமிழிலேயே இருக்க வேண்டும்.

அரசு அலுவலர்
இதை நடைமுறையாக கொண்டு வர வேண்டும். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள், அரசு அலுவலர்கள் தங்கள் பெயர்களை தமிழிலேயே பயன்படுத்த வேண்டும். ஆவணங்களில் தமிழிலேயே பெயர்களை எழுத வேண்டும் என்று தற்போது தமிழ்நாடு அரசு மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளா் மகேசன் காசிராஜன் மூலம் இந்த அறிவிப்பு அனைத்து துறைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

மக்கள்
இது போக தனியாக பொது மக்களுக்கும் தமிழ் மொழி பயன்பாடு தொடர்பான அறிவுறுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் தமிழிலேயே தங்கள் பெயர்களை எழுத பழக வேண்டும். இதை வழக்கமாக அவர்கள் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications