முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட தொகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்வு: எடப்பாடி அதிரடி
சென்னை: முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தற்போது ஆண்டுக்கு வழங்கப்பட்டு வரும் 2 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ காப்பீட்டு தொகையை, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்களுக்கும், உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், 2012ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி அன்று, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் தொடங்கினார் .

இந்த திட்டத்தில் 1.58 கோடி குடும்பங்களுக்கு காப்பீடு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இதுவரை 26.96 லட்சம் நபர்கள் 5133.33 கோடி ரூபாய் அளவிற்கு பயனடைந்துள்ளனர்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகள், பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை மேற் கொள்வதற்கு ஏதுவாக தற்போது வழங்கப்பட்டு வரும் 2 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டு தொகையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கையை பரிசீலனை செய்து, 2 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டு தொகையை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.
அதன்படி, 2018ம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி முதல் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1.58 கோடி குடும்பங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகைக்கு கட்டணமில்லாமல் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications