"பெண்கள் பாதுகாப்பு".. பரபரப்பு கேஸ்களில்.. அடுத்தடுத்து சாட்டையை சுழற்றிய தமிழ்நாடு அரசு.. ஆக்சன்!
சென்னை: தமிழ்நாட்டில் தொடர்ந்து பெண்கள் தொடர்பாக அளிக்கப்படும் பாலியல் ரீதியான புகார்கள், பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
Recommended Video
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் பல்வேறு பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் தோண்டி எடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முன் நடந்த குற்றங்கள், இத்தனை நாட்களாக கண்டுகொள்ளப்படாமல் இருந்த குற்றங்கள், பள்ளியில் நடக்கும் குற்றங்கள் என்று பல்வேறு புகார்களை தோண்டி எடுத்த தமிழ்நாடு அரசு விசாரிக்க தொடங்கி உள்ளனர்.
கடந்த 3 வாரங்களில் மட்டும் பல்வேறு கைதுகள், நடவடிக்கைகள், வழக்குகள் பெண்கள் ரீதியான பாலியல் தொல்லை புகார்கள் பதியப்பட்டு உள்ளன.
அடுத்தடுத்த சம்பவங்கள்.. அரசியல் மோதல் முதல் அந்தரங்க சாட்ஸ் வரை.. பரபரப்பை கிளப்பும்
புகார்
தொடக்கத்தில் தமிழ்நாடு அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மட்டுமே கவனித்து வந்தது. ஆனால் லாக்டவுன் போட்டு கேஸ்கள் குறைய தொடங்கியதில் இருந்து வேகமாக மற்ற விஷயங்களில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த தொடங்கியது. அதில் முக்கியமான விஷயங்கள் பெண்கள் பாதுகாப்பு. பெண்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் நடக்கும் அட்டூழியங்களில் தமிழ்நாடு அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளது.
முதல் நடவடிக்கை
தமிழ்நாடு அரசு முதலில் சுழற்றிய சாட்டை என்றால் பத்மா சேஷாத்திரி பள்ளி விவகாரம்தான். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் மிக முக்கியமான அரசியல் டாப்பிக் என்றால் அது பத்மா சேஷாத்திரி பள்ளி விவகாரம்தான். இந்த பள்ளி குறித்து இன்ஸ்டாகிராமில் வந்த சின்ன புகார், இணையம் முழுக்க பெரிதாக விஸ்வரூபம் எடுத்தது. காலை 9 மணிக்கு புகார் குறித்து பேச்சுக்கள் எழுந்தன.
கைது
11 மணிக்கெல்லாம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரடியாக களமிறங்கி விசாரணைகளை மேற்கொண்டார். மதியமே வழக்கு பதியப்பட்டு, அன்று மாலையே ராஜகோபாலன் என்ற ஆசிரியர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அந்த ஆசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், பத்மா சேஷாத்திரி பள்ளி குறித்து தொடர்ந்து ஒரு பக்கம் விசாரணைகள் நடந்து கொண்டு இருக்கின்றன.
விசாரணை
இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியும் பாலியல் தொல்லை சர்ச்சையில் சிக்கியது. ஆனால் இந்த பள்ளியின் நிர்வாகியான சாமியார் சிவசங்கர் பாபா மீது போக்ஸோ சட்டம் பாய்ந்துள்ளது. அதோடு இதில் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதற்காக உடனே இந்த வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டுள்ளது.
பாலியல் புகார்
பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் புகாரில் இப்படி அடுத்தடுத்து இரண்டு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், இன்னொரு பக்கம் கேமர் மதன் எனப்படும் யூ டியூபருக்கு எதிராகவும் புகார் வைக்கப்பட்டுள்ளது. இதன் கேமர் மதனை இன்றே போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் போலீஸ் உத்தரவிட்டுள்ளது.
ஏன்
சிறுமிகளின் பாலியல் ரீதியான வீடியோக்களை டெலிகிராமில் விலைக்கு விற்றதாகவும், பெண்களிடம் இவர் யூ டியூபிலும் இன்ஸ்டாகிராமிலும் தவறாக பேசியதாகவும் புகார் வைக்கப்பட்டுள்ளது. இவர் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறி உள்ள நிலையில், இன்று மாலையே இவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
தவறு
இன்னொரு பக்கம் சாட்டை துரைமுருகன், கிஷோர் கே சாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது வைக்கப்பட்ட நேரடி புகார்கள் வேறு என்றாலும், இவர்கள் மீது பெண்களை இழிவுபடுத்துதல் தொடர்பாக புகார்களும், வழக்குகள் பதியப்பட்டு உள்ளன. சாட்டை துரைமுருகன் மீது, முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும், பெண் நடிகை ஒருவரை பற்றி பேசியது குறித்தும் புகார் உள்ளது. இந்த பிரிவிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிஷோர் கே சாமி
தற்போது கைது செய்யப்பட்டுள்ள கிஷோர் கே சாமி பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தவறாக பேசி வழக்கு உள்ளது. இவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கும் விசாரிக்கப்பட்டு, அதிலும் தனியாக ரிமாண்ட் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. இத்தனை கைது நடவடிக்கைகளும் தமிழ்நாட்டில் கடந்த 2-3 வாரங்களில் எடுக்கப்பட்ட துரிதமான நடவடிக்கைகள் ஆகும்.
பெண்கள்
தமிழ்நாடு அரசு கடந்த சில தினங்களாக பெண்களுக்கு இலவச பஸ் பயணம், பெண் போலீசாருக்கு பொதுக்கூட்ட, சாலையோர பாதுகாப்பு பணியில் இருந்து விலக்கு, பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் உள்ளிட்ட முக்கியமான திட்டங்களை அறிவித்து வருகிறது. இப்படி பெண்கள் முன்னேற்றம் தொடர்பான திட்டங்கள் அறிவிக்கப்படும் நிலையில், இன்னொரு பக்கம் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் வேகமாக நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.