பஸ் பயணத்தில்.. பெண் பயணிகளை ஆண் பயணிகள் முறைத்து பார்க்க கூடாது.. தமிழ்நாடு அரசு அதிரடி ரூல்ஸ்
சென்னை: பேருந்துகளில் பெண்களை பார்த்து முறைத்தாலோ, தொந்தரவு கொடுத்தாலோ, விசில் அடித்தாலோ பேருந்திலிருந்து இறக்கிவிடலாம் அல்லது காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
தமிழ்நாடு வாகன போக்குவரத்து விதி வரைவில் திருத்தங்கள் செய்யப்பட்டு அது குறித்த கருத்துக்கள் கேட்கப்பட்டு வந்தன. கருத்துகேட்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து விதிகளை திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டு இருக்கிறது.
அதில், பேருந்துகளில் பயணிகளுக்கு ஆண் பயணி ஒருவர் பெண் பயணியை பார்த்து முறைப்பது, சத்தமிடுவது, விசில் அடிப்பது, கண்களை சிமிட்டுவது, பாலியல் ரீதியான புண்படுத்தப்படும் விதத்தில் சைகை காட்டுவது, பாடல்களை பாடுவது தகாத வார்த்தைகளை பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பேருந்துகளில் செல்லும் பெண் பயணிகளை எரிச்சலடைய வைக்கும் காரியங்களில் ஆண் பயணிகள் ஈடுபடக் கூடாது என்றும் நடத்துனர் ஒருமுறை எச்சரிக்கை விடுத்த பிறகு, குற்றம்சாட்டப்பட்ட நபரை செல்லும் வழியிலேயே இறக்கிவிடலாம் என்றும், அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் எனவும் அரசுதழில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
பெண் பயணிகள் பேருந்துகளில் ஏறும்போதும், இறங்கும்போதும் அவர்களை தவறான நோக்கத்தில் தொடக்கூடாது என்றும் தமிழ்நாடு அரசு விதிகளை திருத்தம் செய்து இருக்கிறது. பேருந்தில் வரும் சக பயணிகளுக்கு எரிச்சலூட்டும் காரியங்களில் ஈடுபடக் கூடாது என்று எச்சரித்து இருக்கும் அரசு, வாகனத்தில் புகார் புத்தகத்தை பராமரிக்க வேண்டும் என்றும் நடத்துனர்களுக்கு உத்தரவிட்டு உள்ளது.
எப்போதெல்லாம் போலீஸ் அதிகாரிகள் புகார் புத்தகத்தை கேட்கிறார்களோ அப்போதெல்லாம் அதை அவர்களிடம் அளிக்க வேண்டும் என்றும், பேருந்தில் நடத்துனர் இல்லாத நேரத்தில் புகார் புத்தகம் ஓட்டுநரின் பொறுப்பில் இருக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தி இருக்கிறது.