அதிமுக ஆட்சியில் கஞ்சா தலைவிரித்தாடியது.. குட்கா வழக்கே சாட்சி.. எடப்பாடி கேள்விக்கு ஸ்டாலின் பதிலடி
சென்னை: போதைப் பொருட்களை வேரோடு ஒழிப்பதுதான் திமுக ஆட்சியின் இலக்கு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போதைப் பொருட்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அதிமுக ஆட்சியில் குட்காவும் கஞ்சாவும் தலைவிரித்தாடியதாக விமர்சித்த மு.க.ஸ்டாலின், போதைப் பொருட்களை தடுப்பதில் தமிழ்நாடு அரசு வரலாறு படைத்துள்ளதாக பதில் அளித்தார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. குறிப்பாக கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் எளிதாக இளைஞர்களின் கைகளுக்கு கிடைப்பதாக விமர்சித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து கஞ்சா விற்பனையையும், கடத்தலையும் தடுக்க ஆபரேஷன் கஞ்சா என்ற திட்டம் காவல்துறையினரால் செயல்படுத்தப்பட்டது. இந்த ஆபரேஷனில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் கஞ்சா விற்பனை கட்டுக்குள் வரவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

எடப்பாடி பழனிசாமி கேள்வி
இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பாதை மாறி போவதாகவும், போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

மு.க.ஸ்டாலின் பட்டியல்
இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசுகையில், 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் கூட்டத்தை நடத்தினோம். போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக 50,875 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்கள். 11 லட்சத்து 59 ஆயிரத்து 906 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக 12,294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 17,250 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

திமுக ஆட்சி
கடந்த ஜனவரி 3ம் தேதி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். ஜாமீன் வழங்குவதில் கடுமையான எதிர்ப்பு, வங்கி கணக்குகள் முடக்கம், சொத்துகள் முடக்கம், உறுதிமொழி பத்திரம் பெறுவது ஆகியவை திமுக ஆட்சியில் தான் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது, வழக்கை திறம்பட நடத்தி சிறை தண்டனை பெற்று தருவதும் திமுக ஆட்சியில் தான் நடந்து வருகிறது.

குட்கா விவகாரம்
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும் போதும் நானே ஆய்வு செய்து வருகிறேன். போதைப்பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வுகள் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நடத்தப்படவில்லை. அதிமுக ஆட்சியில் குட்கா மாமுல் பெற்று போதைப்பொருள் விற்பனை புற்றுநோய் போல் அதிகரித்தது. அப்போது அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், டிஜிபி, காவல் ஆணையர் பெயரில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் அளவிற்கு, கஞ்சாவும் குட்காவும் தலைவிரித்தாடியது.

குட்கா வழக்கே சாட்சி
அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட போதைப்பொருள் என்னும் புற்றுநோயை தடுக்க திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்க ஆளாகி இருக்கிறோம். அதிமுக ஆட்சியில் எடுத்த நடவடிக்கைகளுக்கும், நாங்கள் எடுத்த நடவடிக்கைகளுக்கும் குட்கா வழக்கே சாட்சி. கடந்த ஆட்சியில் நடவடிக்கை இல்லை என்பதால் செய்தி வரவில்லை. நாங்கள் நடவடிக்கை எடுப்பதால், செய்தி வருகிறது.

எங்கள் இலக்கு
போதைப்பொருள் விவகாரத்தில் கடந்த ஆட்சியில் கண்டும் காணாமல் இருந்ததால் நாங்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். போதைப் பொருட்களை தடுப்பதில் தமிழ்நாடு அரசு புதிய வரலாறு படைத்துள்ளது. போதைப் பொருட்களை வேரோடு ஒழிப்பதுதான் திமுக ஆட்சியின் இலக்கு என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications