“சிந்துவை பார்த்து கத்துக்கோங்க.. எத்தனை தடைகள் வந்தாலும்..” - நெகிழ்ந்துபோன முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: படுத்த படுக்கையாக தேர்வு எழுதிய 12ஆம் வகுப்பு மாணவி சிந்துவின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டு வீட்டின் 3வது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் இரு கால் எலும்புகள் முறிந்த நிலையில் மாணவி சிந்து படுத்த படுக்கையாகவே தேர்வு எழுதினார்.
உஷார்.. தெற்கு அந்தமானில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.. 4 நாட்களுக்கு இங்கெல்லாம் மழை இருக்கு
விபத்தில் கால் எலும்புகள் முறிந்தாலும் தேர்வுகளை எழுதிவரும் மாணவி சிந்துவைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை மாணவி
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த வாலிபால் வீராங்கனையான +2 மாணவி சிந்து கடந்த 2020ஆம் ஆண்டு வீட்டின் 3வது மாடியில் தோழியுடன் விளையாடியபோது தவறி விழுந்ததில் இரு கால் எலும்புகளும் முறிந்தன. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிந்துவுக்கு 10க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவி சிந்து படுத்த படுக்கையாகவே இருந்து வருகிறார். சிந்துவின் அப்பா சைக்கிளில் சென்று டீ வியாபாரம் செய்பவர்.
+2 தேர்வு எழுதிய சிந்து
இந்நிலையில், நேற்று 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வில் மாணவி சிந்து படுத்த படுக்கையாகவே இருந்து பங்கேற்றுள்ளார்.
சிந்துவால் சிறிது நேரம் கூட அமர்ந்திருக்க முடியாது. அவருக்காக பிரத்யேக படுக்கை வசதியுடன், தனி தேர்வு அறை தயார் செய்யப்பட்டு, அவர் சொல்லச் சொல்ல, வேறொருவர் தேர்வை எழுதினார்.
நெகிழவைத்த புகைப்படம்
மாணவி சிந்து தேர்வு எழுத அவரது அப்பா, சிந்துவை தேர்வு எழுதுவதற்காக தூக்கி வந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. பள்ளித் தேர்வுகளுக்கும், சிந்துவை அவரது குடும்பத்தினரே தூக்கி வந்து எழுதச் செய்துள்ளனர்.
மேலும், வாலிபால் வீராங்கனையாக திகழ்ந்த சிந்து, மீண்டும் எழுந்து வாலிபால் ஆட வேண்டும் என தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
முதல்வர் பெருமிதம்
இந்தச் செய்தியை அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "வினைத்திட்பம் என்பதொருவன் மனத்திட்பம்!" கடுமையான நெருக்கடிகளின்போதுதான் ஒருவரின் மனவுறுதி வெளிப்படும். விபத்தில் கால் எலும்புகள் முறிந்தாலும் நம்பிக்கையும் கற்கும் ஆர்வமும் முறியாமல் தேர்வுகளை எழுதிவரும் மாணவி சிந்துவைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதிரடி அறிவிப்பு
மேலும், "தடைகள் வரினும் சோர்ந்து போகாமல் எதையும் முயன்று பார்க்கும் மனவலிமையை சிந்துவைப் பார்த்து மாணவர்கள் கைக்கொண்டு, தேர்வுகளைத் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்!
மீண்டும் வாலிபால் ஆடவேண்டும் என்ற சிந்துவின் ஆசையை நிறைவேற்றத் தேவையான மருத்துவச் செலவுகளை அரசே ஏற்கும்!" என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.