கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை குறையே சொல்ல முடியாது.. ஹைகோர்ட்டில் தமிழக அரசு கருத்து
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தூரத்தை தவிர வேறு எந்த குறையும் சொல்ல முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இடநெருக்கடி காரணமாக கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையம் கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் பொங்கலுக்கு கிளாம்பாக்கத்தில் இருந்துதான் புறப்பட்டு சென்றது. இதையடுத்து ஜனவரி 24 ஆம் தேதியிலிருந்து அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்துதான் இயங்கும் என தமிழக போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டது.
அதன்படி அன்றைய தினம் அனைத்து அரசு பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்பட்டன. அதற்கு அடுத்த நாளே ஜனவரி 25, 26, 27, 28 என தொடர் விடுமுறை வந்தது. இந்த நிலையில் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயக்க அரசிடம் அனுமதி கேட்டது. அதற்கு அரசு மறுத்தது. இதனால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கமோ கோயம்பேட்டில் இருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்குவோம் என்றனர்.
மேலும் தங்கள் பயணிகள் இந்த தொடர் விடுமுறைக்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பே புக்கிங் செய்துவிட்டதால் அவர்களை அலைக்கழிக்க வைக்க முடியாது. மேலும் கிளாம்பாக்கத்தில் எங்களுக்கு சொந்தமான 1000 பேருந்துகளை நிறுத்த இடவசதி இல்லை என்றும் நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம் என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையத்தை 24 ஆம் தேதி மாலை முதலே போலீஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அங்கிருந்து பயணிகளுடன் இயக்க முயன்ற ஆம்னி பேருந்துகளை தடுத்து நிறுத்தினர். மேலும் பயணிகளை கிளாம்பாக்கத்திலிருந்து ஏறி செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதனால் அங்கு ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்கும் போலீஸாருக்கும் பயணிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஆம்னி பேருந்துகள் பயணிகள் இல்லாமல் கிளாம்பாக்கத்திற்கு அனுப்பப்பட்டன. இந்த நிலையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஜனவரி 24 ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து அவர்கள் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு முடியும் வரை கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க கோரிக்கை விடுத்தனர்.
அப்போது நீதிபதி, ஆம்னி பேருந்துகளை மேலும் சில வாரங்களுக்கு கோயம்பேட்டிலிருந்து இயக்க முடியுமா என கேட்ட நிலையில், தமிழக போக்குவரத்து ஆணையர் நாளை (பிப்ரவரி 1 ஆம் தேதி) பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் கூறுகையில், கோயம்பேட்டில் ஆம்னி பேருந்துகளை நிறுத்தி வைக்க அனுமதிக்கலாம் என்றார். மேலும் கிளாம்பாக்கம் ரூ 400 கோடியில் திறக்கப்பட்டது. இங்கு தூரத்தை தவிர வேறு எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications