டெல்லி போய்விட்டு வந்த பின் கோவை சம்பவம் குறித்து 'அதே பல்லவியை' பாடிய ஆளுநர் ஆர்.என்.ரவி ட்வீட்!
சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக முன்னர் தெரிவித்த கருத்துகளை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமது டெல்லி பயணத்தின் பின்னர் மீண்டும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் முன்பாக கார் சிலிண்டர் வெடித்தது. இதில் முபின் என்பவர் உயிரிழந்தார். கார் சிலிண்டர் வெடித்த இடத்தில் பால்ரஸ் குண்டுகள், ஆணிகள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் முபின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அச்சோதனையில் வெடிகுண்டு தயாரிக்க பயன்படக் கூடிய வெடிமருந்துகள் சிக்கின.

என்.ஐ.ஏ. விசாரணை
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளில் முபினின் கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். கோவையில் பயங்கரவாத தாக்குதலுக்கு முபினும் கூட்டாளிகளும் சதித் திட்டம் தீட்டியிருக்கலாம் எனவும் கூறப்பட்டது. இந்த வழக்கை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரைத்தார். இதனடிப்படையில் மத்திய அரசும், என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட்டது. தற்போது கோவை கார் சிலிண்டர் வெடிப்பு நிகழ்வை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

தமிழக அரசு மீது ஆளுநர் விமர்சனம்
இந்நிலையில் கடந்த மாதம் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை கோவை குண்டுவெடிப்பு சம்பவம் என அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டார். அத்துடன் என்.ஐ.ஏ. விசாரணைக்கு 4 நாட்கள் தாமதமாக தமிழக அரசு பரிந்துரைத்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். இந்த தாமதத்தால் ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன எனவும் ஆளுநர் ரவி கூறியிருந்தார்.

ஆளுநர் ரவிக்கு கண்டனம்
ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். கோவையை அவமதிக்கும் வகையில் பயங்கரவாத இடமாக மாறிவிட்டதாக ஆளுநர் கூறியதை திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. அத்துடன் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். திமுகவும் கையெழுத்தியக்கம் நடத்தியது.

மீண்டும் சர்ச்சை கருத்து
இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் மேற்கொண்டிருந்தார். தமது டெல்லி பயணத்துக்குப் பின்னர் மீண்டும் கோவை சம்பவம் தொடர்பாக தாம் தெரிவித்த கருத்துகளை அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்துள்ளார். ஆளுநர் ரவியின் இன்றைய ட்விட்டர் பதிவு: கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ விடம் ஒப்படைப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் உயர்மட்ட பயங்கரவாத சதித்திட்டத்தில் முக்கிய ஆதாரங்களை அழிப்பது குறித்து ஆளுநர் கவலை தெரிவித்தார். அவர் தமிழக காவல்துறையை பாராட்டினார் மற்றும் பயங்கரவாதிகள் யாருக்கும் நண்பர்கள் இல்லை. PFI மீதான தடையைத் தொடர்ந்து 5 நாட்களுக்கும் மேலாக மாநிலத்தில் நடத்தப்பட்ட இலக்கு தாக்குதல்களை ஆளுநர் நினைவு கூர்ந்தார். பயங்கரவாதத்தை முறியடிக்க நிர்வாக நிறுவனங்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தினார். இவ்வாறு பதிவிட்டு ஆளுநரின் வீடியோவும் பகிரப்பட்டுள்ளது. டெல்லி பயணத்துக்கு பின்னர் மீண்டும் அதே கருத்தை ஆளுநரின் ட்விட்டர் பதிவில் பகிரப்பட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது.












Click it and Unblock the Notifications