பாராலிம்பிக்ஸில் வெள்ளி வென்ற.. மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்க பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ 2 கோடி ஊக்கப் பரிசை அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில் இந்தியா சார்பில் 9 வகையான போட்டிகளில் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

மாரியப்பனுக்கு வெள்ளி
இன்று நடைபெற்ற ஆடவருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் இரண்டு பதக்கங்கள் கிடைத்தன. உயரம் தாண்டுதல் இறுதிப்போட்டியில் 1.86 மீட்டர் உயரத்தைத் தாண்டிய இந்திய வீரர் மாரியப்பன் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். அதேபோல மற்றொரு இந்திய வீரரான ஷரத் குமார் வெண்கலம் வென்றார். 1.88 மீட்டர் உயரத்தைத் தாண்டிய அமெரிக்காவின் சேம் க்ரேவ் தங்கம் வென்றார்.

2ஆவது பதக்கம்
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, ஏற்கனவே கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் அவர் தங்கம் வென்றிருந்தார். இந்நிலையில், தொடர்ந்து 2ஆவது பாராலிம்பிக் போட்டியில் அவர் பதக்கம் வென்றுள்ளார். பதக்கம் வென்ற மாரியப்பனுக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
முதல்வர் ஸ்டாலின் மாரியப்பனை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்தியா தொடர் வெற்றிகளைக் குவித்துவருவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து இரண்டாவது முறையாக உயரம் தாண்டுதலில் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரர் மாரியப்பன் தங்கவேலு, உயரம் தாண்டுதல் மற்றும் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்றுள்ள சரத்குமார் மற்றும் சிங்ராஜ் அதானா ஆகிய மூவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று முதல்வர் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூ 2 கோடி ஊக்கப்பரிசு
இந்நிலையில், டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரிப்பனுக்கு ரூ 2 கோடி ஊக்கப் பரிசு அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "அடுத்தடுத்து 2 பாராலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ள தமிழ்நாட்டின் தடகளத் தங்கமகன் மாரியப்பனின் சாதனையால் இந்தியாவும் தமிழ்நாடும் பெருமைகொள்கிறது. அவரது சாதனையைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு அளிக்கப்படுகிறது. சாதனைப்பயணம் தொடர வாழ்த்துகள்!" எனப் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications