கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்! டிஸ்மிஸ் செய்ய உத்தரவு? உண்மையில் தமிழக அரசு உத்தரவு என்ன
சென்னை: கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் இரண்டாவது நாளாகத் தொடரும் நிலையில், இது தொடர்பாகத் தமிழக அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்து உள்ளது.
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருபவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சூழலில் இந்தப் போராட்டத்தில் அரசு முக்கிய உத்தரவைப் பிறப்பித்து உள்ளதாகத் தகவல் பரவியது. இது போராடும் விரிவுரையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

போராட்டம்
இன்று இரண்டாவது நாளாகப் போராட்டம் நடைபெறும் நிலையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் போராடும் கவுரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணி நீக்கம் செய்யக் கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவிட்டதாகத் தகவல் பரவியது. மேலும், போராட்டம் நடத்துவோருக்கு மாற்றாக உரியத் தகுதியுடன் கூடிய கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியானது.

பரவிய தகவல்
மேலும், கவுரவ விரிவுரையாளர்களைப் போராட்டத்தைக் கைவிடக் கல்லூரி முதல்வர்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் போராட்டத்தைக் கைவிடாத கவுரவ விரிவுரையாளர்களை பணியில் இருந்து உடனே நீக்க வேண்டும் என்றும் தகவல் வெளியானது. மேலும், வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுரவ விரிவுரையாளர்கள் மீண்டும் பணி நியமனம் கோரி வந்தால் சேர்க்கக் கூடாது என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது.

மறுப்பு
இந்நிலையில், இந்தத் தகவலுக்குத் தமிழக அரசு மறுப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக உயர் கல்வித் துறை அரசு முதன்மைச் செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டால், அவர்களைப் பணிநீக்கம் செய்யுமாறு கல்லூரிக் கல்வி இயக்குநரால் ஆணையிடப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்படுகிறது. தமிழக அரசின் நோக்கம் தற்போது பணிபுரிந்துவரும் கவுர விரிவுரையாளர்களை நீக்குவது அல்ல.

சலுகை மதிப்பேன்
இதுவரை இல்லாத வகையில், முதல்வர் மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சரின் அறிவுறுத்தல்கள் மற்றும் ஆணைகளுக்கு இணங்க, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 4000 உதவிப் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில் கவுரவ விரிவுரையாளர்களும் கலந்துகொள்ளலாம். அவர்களுக்கு நேர்காணலில் மொத்தமுள்ள 30 மதிப்பெண்களில் 15 மதிப்பெண்கள் சலுகை மதிப்பெண்களாக வழங்கப்படவுள்ளது.

ஒத்துழைப்பு தேவை
இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளன. கவுரவ விரிவுரையாளர்கள் இந்தத் தேர்வுகளில் பங்கேற்று பணிவாய்ப்பு பெற்றுப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அரசுக் கல்லூரிகளில் ஒரு சில கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாகத் தெரிய வருகிறது. அவர்களும் போராட்டத்தைக் கைவிட்டு அரசின் முடிவிற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications