2015இல் ஏற்பட்ட மாபெரும் பிரச்சனை.. இந்த முறை நிச்சயம் ஏற்டாது.. தமிழக அரசு வைத்துள்ள சூப்பர் பிளான்
சென்னை: 2015 வெள்ளத்தின் சமயத்தில் டெலிகாம் சேவைகள் பாதிக்கப்பட்ட நிலையில், அதேபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கத் தமிழ்நாடு அரசு டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
Recommended Video
வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது.
தலைநகர் சென்னையில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் குறுகிய நேரத்தில் கனமழை பெய்ததில் நகரில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

சென்னை கனமழை
அதன் பின்னரும் மழை முழுவதுமாக நின்றபாடில்லை. தொடர்ந்து பெய்து வரும் மழையால் மீட்புப்பணிகள் தாமதம் ஆகியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டர் கொண்டு வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தலைநகர் சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து 4ஆவது நாளாக இன்றும் ஆய்வு செய்தார்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
அதேநேரம் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த பகுதியானது மேலும் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை, ஸ்ரீஹரி கோட்டாவுக்கும், காரைக்காலுக்கும் இடையே கடலூரில் கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயலாக வலுப்பெறாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடப்பதால் அதிதீவிர கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட்
இதனால் சென்னைக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை தொடங்கி நள்ளிரவைத் தாண்டி சுமார் 12 முதல் 14 மணி நேரத்திற்குச் சென்னை தொடங்கி கடலூர், டெல்டா பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2015 பெருவெள்ளம்
இந்த மழை எச்சரிக்கை தொடர்பான அறிவிப்பு வெளியானதுமே பலரும் 2015இல் ஏற்பட்டதைப் போன்ற பாதிப்புகள் மீண்டும் ஏற்படுமோ என்று அஞ்சினர். 2015 பெருவெள்ளத்தின் சமயத்தில் சென்னை நகர் பகுதிகளில் 300மிமீ மழையும் புறநகரில் 500 மிமீ வரை என மிக அதிக மழை பெய்தது. மேலும், செம்பரம்பாக்கம் ஏரி திடீரென திறந்துவிடப்பட்டதும் மோசமான பாதிப்புகளைப் பெய்தது. இதனால் அப்போது சென்னை நகர் முழுவதுமே வெள்ளக்காடாகக் காட்சி அளித்தது.

டெலிகாம் சேவை பாதிப்பு
தலைநகரில் உள்ள பெரும்பாலான வீடுகளில் மழை நீர் புகுந்தது. மேலும், சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. அப்போது சென்னைவாசிகள் எதிர்கொண்ட மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்று டெலிகாம் சேவை பாதிப்பு. 2015 பெருவெள்ளத்தின் சமயத்தில் நகரமே பாதிக்கப்பட்டதால் இணையச் சேவையும் டெலிகாம் சேவைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டன. மக்களால் ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து பணம் எடுக்க முடியவில்லை. பெரும்பாலான பகுதிகளில் செல்போன் சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் சொல்ல முடியாத சிக்கலை எதிர்கொண்டனர்.

தமிழக அரசு நடவடிக்கை
அடுத்த 2 நாட்களும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குறிப்பாக 2015 வெள்ளத்தின் சமயத்தில் டெலிகாம் சேவைகள் பாதிக்கப்பட்ட நிலையில், அதேபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கத் தமிழ்நாடு அரசு டெலிகாம் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன,

நடமாடும் டவர்கள்
குறிப்பாக, மோசமான மழையால் டவர்கள் செயல்படாத நிலை ஏற்பட்டால் அதைச் சமாளிக்கும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 50 நடமாடும் டவர்கள் தாயார் நிலையில் வைத்துள்ளன. அதேபோல எரிபொருள் மற்றும் சிலிண்டர்கள் பொதுமக்களுக்குத் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஆலோசனைகளைத் தமிழ்நாடு அரசு நடத்தியுள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

உதவி எண்கள்
தலைநகர் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 1913, 04425619206, 04425619207, 04425619208 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம் எனச் சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications