"பெண் சக்தி".. நேர்மையான அதிகாரி.. உளவு ஐஜியாக ஆசியம்மாள் பதவி உயர்வு.. தமிழக வரலாற்றில் முதல்முறை!
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 30 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில் தமிழ்நாடு காவல்துறையில் உளவுத்துறை ஐஜியாக ஆசியம்மாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு காவல்துறையில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது!
தமிழ்நாட்டில் நேற்று முக்கியமான 30 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். ஐபிஎஸ் அதிகாரி ஆா்.வி.ரம்யா பாரதி சென்னை பெருநகர காவல்துறையின் வடக்கு மண்டல இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். ஐபிஎஸ் அஸ்ராகா்க்-ஐஜி மத்திய அரசுப் பணி (தில்லி சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு டிஐஜி) ஏ.ஜி.பாபு-திருப்பூா் மாநகர காவல் ஆணையா் (வேலூா் சரக டிஐஜி) இடமாற்றம் செய்யப்பட்டார்.
ஐபிஎஸ் கே.ஏ.செந்தில்வேலன்-ஐஜி மத்திய அரசுப் பணி (டிஐஜி இந்திய தூதரக பணி பாங்காக்) இடமாற்றம் செய்யப்பட்டார். ஐபிஎஸ் அவினாஷ்குமாா்-ஐஜி மத்திய அரசுப் பணி (மத்திய உளவுத்துறை டிஐஜி நாக்பூா்) இடமாற்றம் செய்யப்பட்டார்.

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
ஐபிஎஸ் ஆா்.பொன்னி-மதுரை மண்டல டிஐஜி (சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்பி) இடமாற்றம் செய்யப்பட்டார். ஐபிஎஸ் சோனல் சந்திரா-டிஐஜி மத்திய அரசு பணி (புது தில்லி சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு எஸ்பி) இடமாற்றம் செய்யப்பட்டார். நேற்று இடமாற்றம் செய்யப்பட்டவர்களில் 18 பேருக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு காவல்துறையில் உளவுத்துறை ஐஜியாக ஆசியம்மாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உளவுத்துறையில் டிஐஜியாக இருந்தவர் தற்போது ஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

உளவுத்துறை ஐஜியாக ஆசியம்மாள்
தமிழ்நாடு காவல்துறை வரலாற்றில் இது முக்கியமான சாதனையாக பார்க்கப்படுகிறது. உளவுத்துறையில் டிஐஜியாக முதல்முறை பொறுப்பேற்றவரும் இவர்தான். இப்போது அதே பிரிவில் ஐஜியாக பதவி உயர்வு பெற்ற முதல் பெண் போலீஸ் அதிகாரியும் இவர்தான். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆசியம்மாள். நேர்மையான அதிகாரி என்று பாராட்டப்பட்டவர். அதேபோல் தனது துறையில் மிகவும் கண்டிப்புடன் இருக்க கூடியவர். தூத்துக்குடியில் கொங்கராயக் குறிச்சி என்ற கிராமத்தில் போதிய வசதிகள் இன்றி படித்து வளர்ந்தவர்.

போலீஸ் பணி
குடும்பத்தில் நிறைய கஷ்டங்கள் இருந்தும், அதற்கு இடையிலும் கல்வி ஒன்றையே குறிக்கோளாக வைத்துக்கொண்டு தொடர்ந்து பல்வேறு பட்டங்களை இவர் படித்து முடித்தார். எம்எஸ்சி, எம்டெக் மற்றும் எம்பிஏ ஆகிய பட்டங்களை பெற்றவர், வேறு பணிகளில் கவனம் செலுத்தாமல் குரூப்-1 தேர்வுகளை எழுதுவதில் கவனம் செலுத்தினார். இதில் தேர்ச்சி பெற்று டிஎஸ்பியாக பணியமர்த்தப்பட்டார். அதன்பின் பல்வேறு துறைகளுக்கு இவர் மாற்றப்பட்டார்.

புரொமோஷன்
இவரின் நேர்மை மற்றும் பணித்திறன் காரணமாக வேகமாக இவருக்கு புரொமோஷன்களும் வழங்கப்பட்டது. முதலில் வரதட்சணைக் கொடுமைத் தடுப்புப்பிரிவில் டிஎஸ்பியாக இருந்தார். பின்னர் மகாபலிபுரத்தில் டிஎஸ்பி, அதன்பின் சென்னையில் பல்வேறு இடங்களில் உதவி ஆணையர் ஆகிய பொறுப்புகளை வகித்தார். எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அரசியல் சார்பற்று இருந்த காரணத்தால் தொடர்ச்சியாக இவருக்கு புரொமோஷன்கள் வந்ததாக கூறப்படுகிறது.

சாதனை
அதன்பின் உளவுத்துறையில் சில காலம் பணியாற்றினார். பின்னர் ஊழல் தடுப்பு பிரிவில் சில காலம் பணியாற்றினார். தொடர்ந்து பல்வேறு பிரிவுகளுக்கு மாற்றப்பட்டாலும் தொடர்ந்து பணித்திறன் காரணமாக இவருக்கு அடிக்கடி பதவி உயர்வும் வழங்கப்பட்டது. பல்வேறு பிரிவுகளில் எஸ்பியாக இருந்தவர் பின்னர் 4 வருடங்களுக்கு முன் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றார். அதுதான் தமிழ்நாடு காவல்துறை வரலாற்றில் முதல்முறை.

தமிழ்நாடு காவல்துறை வரலாற்றில் முதல்முறை
இந்த நிலையில் தமிழ்நாடு காவல்துறையில் உளவுத்துறை ஐஜியாக ஆசியம்மாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு காவல்துறையில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன் உளவுத்துறை ஐஜியாக பெண் அதிகாரி யாரும் நியமிக்கப்பட்டது இல்லை. முதல்முறை இந்த ரேங்க் பெண் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது மிகப்பெரிய வரவேற்கத்தக்க முடிவாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications