கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரியில் இருந்து வர இ பதிவு தேவையில்லை.. தமிழக அரசு தகவல்
சென்னை: கர்நாடகா, புதுச்சேரி மற்றும் ஆந்திராவில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பதிவு தேவையில்லை என்றும் கேரளா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, டெல்லி உள்பட இந்தியாவின் பிற எந்த மாநிலத்தில் இருந்து வந்தாலும் இ-பதிவு கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கும் இ-பதிவு கட்டாயம் என்று அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் கொரோனா பரவல் தொடங்கியபோது, மாவட்டங்களுக்கிடையே வாகனப் போக்குவரத்து தடுக்கப்பட்டு, இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது. அதன்பின்னர் , இ-பாஸ் முறை தமிழகத்திற்கு இடையே ரத்து செய்யப்பட்டது. ஆனால் அதேநேரம் வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருவதற்கு இ-பதிவு முறை கொண்டுவரப்பட்டது.
ஆனால் கொரோனா பரவல் வெகுவாக குறைந்த காரணத்தால் வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டவில்லை. ஒரு கட்டத்தில் கண்டுகொள்ளப்படவில்லை.
உத்தரவு
இந்நிலையில் கொரோனா பரவல் தமிழகத்தில் மீண்டும் உச்சம் பெற தொடங்கி உள்ளதால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி பேருந்துகளில் நின்று பயணிக்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடங்களில் முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு கடுமையாக பின்பற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
3 மாநிலங்களுக்கு விலக்கு
அதேநேரம் புதிய கட்டுப்பாடுகள்படி, தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தில் எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ பதிவு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திராவில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பதிவு தேவையில்லை என விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எப்படி பதிவது
ஆனால் கேரளா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, டெல்லி உள்பட எந்த மாநிலத்தில் இருந்து வந்தாலும் இ-பதிவு கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கும் இ-பதிவு கட்டாயம் என்று அறிவித்துள்ளது. அவர்கள், 'https://eregister.tnega.org' என்ற இணையதளம் மூலம் தங்கள் விவரங்களை பதிவு செய்து, இ-பதிவு ஆவணத்தை பெற்று பயணிக்கலாம். இணையதளத்தில் பதிவு செய்தவுடன் எந்த அனுமதிக்கும் காத்திருக்கத் தேவையில்லை என்றும் தமிழகத்துக்குப் பயணத்தைத் தொடங்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
மிகவும் எளிது
வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோர் தங்களது அனைத்து விவரங்களையும் தமிழக அரசின் பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில், தனிநபா் வாகனம், ரயில், விமானம் மூலமாக வருவோருக்கென தனித்தனியாகப் பக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழகம் வருவதற்கான பிரத்யேக காரணம், தமிழகத்தில் பயணம் செய்யும் இடம், விண்ணப்பதாரா் பெயா், பாலினம், உடன் பயணிப்போரின் எண்ணிக்கை ஆகிய விவரங்களைப் பதிவிட வேண்டும். மேலும், விண்ணப்பதாரா் தனது ஆதார்அட்டை, குடும்ப அட்டை, வாகன ஓட்டுநா் உரிமம், நிரந்தர கணக்கு எண், கடவுச் சீட்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும். தனிநபா் வாகனமாக இருந்தால் வாகனத்தின் எண்ணைக் குறிப்பிட வேண்டும். ஏனெனில் அவா்களில் யாருக்கெனும் தமிழகம் வந்த பிறகு கடுமையான கரோனா தொற்று இருந்தால் அவரது இணைய வழி பதிவை வைத்து அவருடன் தொடா்பில் இருந்த மற்றவா்களையும் பின்தொடர ஏதுவாக இருக்கும். இதற்காகவே இணைய வழி பதிவு முறை அமலில் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.