தமிழ்நாட்டிலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் வருகிறதோ? ஐடியா கொடுப்பது தாய் கழகம் வீரமணியாச்சே!
சென்னை: தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக கி.வீரமணி கூறியுள்ளதாவது: இன்றைய 'தினத்தந்தி' நாளேட்டில் வெளிவந்துள்ள ஒரு செய்தி- ஆவிகளிடம் பேச வைப்பதாக ஏமாற்றி என்ஜினீயரிடம் ரூ.2 கோடி மோசடி; கேரள மந்திரவாதி அதிரடி கைது! இதுபோன்ற மூடநம்பிக்கைகளுக்குப் பலியாகி, மக்கள் பாதிக்கப்படும் நிகழ்ச்சிகள் இப்போதெல்லாம் தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களிலும் பரவி வருகின்றன. மாந்திரிகம் என்ற பெயரில் பெண்களிடம் நகை பறித்தல், பில்லி, சூன்யம் எடுக்கும் பெயரால் பணமோசடி, நகைக் கொள்ளைகள், பெண்களிடம் வன்கொடுமை -பாலியல் சீண்டல்கள், சில இடங்களில் நரபலி - தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் இவை போன்று நடந்தது கண்டறியப்பட்டுள்ளது வேதனை தருவதாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51-ஏ(எச்) பிரிவு - ''இந்திய குடிமக்களிடையே அறிவியல் மனப்பாங்கை வளர்த்து, கேள்வி கேட்கும் திறனை வளர்ப்பது, சீர்திருத்தம், மனிதநேயம் பரப்புதல் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை'' என்று வற்புறுத்துகிறது.

இது வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இல்லாமல், நடைமுறையில் செயலுரு கொண்டால், மேற்காட்டிய - ஏமாற்று வேலைகளுக்கும், புரட்டர்களுக்கும் இடமில்லாமல் செய்ய முடியும். ஏற்கெனவே பல ஆண்டுகளுக்குமுன் மகாராட்டிரத்தில் இத்தகைய மூடத்தனத்திற்கு எதிரான தனிச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மராட்டிய பகுத்தறிவாளர் கொலை செய்யப்பட்ட மனிதநேயரான டாக்டர் தபோல்கர் இதற்காகப் பெரிதும் உழைத்து வெற்றி கண்டார்! கருநாடகாவில் சித்தராமையா தலைமையில் அமைந்த முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு முழுமையடைந்ததாகத் தெரியவில்லை. கேரளாவில் இதுபோன்ற ஒரு தனிச் சட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தந்தை பெரியாரின் பகுத்தறிவு மண்ணான தமிழ்நாட்டில் சிறப்போடு நடைபெற்றுவரும் 'திராவிட மாடல்' அரசு, அவசியம் இப்படி ஒரு தனிச் சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றி, இம்மாதிரி மூடத்தனத் தொற்றுநோய்க்கு முடிவு கட்ட முன்வரவேண்டும்.
51-ஏ(எச்) பிரிவின்படி அது அரசமைப்புச் சட்டக் அடிப்படை கடமையுமாகும். நமது 'திராவிட மாடல்' முதலமைச்சர் தந்து வரலாறு படைக்க வேண்டுகிறோம். முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா தொடங்கும் இந்தக் காலகட்டத்தில், இதை ஒரு தனிப்பெரும் சாதனையாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்குப் பரிசாக நமது 'திராவிட மாடல்' முதலமைச்சர் தந்து வரலாறு படைக்க வேண்டுகிறோம். இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications