கலைஞர் பேனா நினைவு சின்னம் - ஒப்புதல் வழங்க கோரி மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்
சென்னை: சென்னை மெரினா கடலில் கலைஞர் கருணாநிதி பேனா நினைவு சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்க கோரி மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

சென்னை மெரினா கடலில் கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் வழங்கியது. இதனையடுத்து கலைஞர் பேனா நினைவு சின்னத்துக்கான சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை மத்திய அரசின் சுற்றுச் சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் தாக்கல் செய்துள்ளது தமிழ்நாடு அரசு. மேலும் இந்த அறிக்கையின் அடிப்படையில் கலைஞர் பேனா நினைவு சின்னத்துக்கு ஒப்புதல் வழங்கவும் கோரி உள்ளது தமிழ்நாடு அரசு.
பின்னணி என்ன? : தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ந் தேதி காலமானார். சென்னை மெரினா கடற்கரை அண்ணா நினைவிட வளாகத்திலேயே கருணாநிதி நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் 2.23 ஏக்கர் பரப்பளவில் இந்த நினைவிடம் கட்டப்படுகிறது.
கருணாநிதியை போற்றும் வகையில் மெரினா கடலில் ரூ81 கோடி செலவில் 134 அடி உயர கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைக்கவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருக்கிறது. கண்ணாடி பாலம் வழியாக கடலில் நடந்து சென்று கலைஞர் பேனா சின்னத்தை பார்வையிடும் வகையில் இது அமைக்கப்பட உள்ளது.
கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில், பேனா நினைவு சின்னத்தை கடலில் வைத்தால் உடைப்பேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சையானது.
இந்நிலையில் கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான ஒப்புதல் தரக் கோரி தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. மேலும் மத்திய சுற்றுச் சூழல் மதிப்பீட்டு குழுவிடம் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதனடிப்படையில் தமிழ்நாடு சென்னை மெரினா கடலில் கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications