சென்னையில் பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை- பல மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு தொடரும் மழை!
சென்னை: சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்க்கிறது. சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு கனமழை நீடிக்கும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியான அடுத்த 24 மணிநேரத்தில் வலுவடையும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் தமிழகம், புதுச்சேரியில் நவம்பர் 14-ந் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது என்கிறது வானிலை ஆய்வு மையம்.

மேலும் காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு அதிதீவிர கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் கனமழை கொட்டியது. சென்னையில் தியாகராய நகர், ஆழ்வார்பேட்டை, எழும்பூர், கோயம்பேடு என பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதேபோல் புறநகரிலும் வியாழக்கிழமை இரவு மழை கொட்டியது.

இதனிடையே வடகடலோர மாவட்டங்களில் இரவு 7 மணி முதல் இரவு 10 மணிவரை அதிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த 3 மணிநேரத்தில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்கிறது வானிலை ஆய்வு மையம்.












Click it and Unblock the Notifications