இனி பவர் கட்டுக்கு குட் பை! மின்மிகை மாநிலமாகும் தமிழ்நாடு.. 5 மாதம் நோ பிராப்ளம்
சென்னை: கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் அதிகளவில் மின் உற்பத்தி செய்யப்பட்டு இருப்பதால் 5 மாதங்கள் மின் மிகை மாநிலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றாலை மூலமாக தமிழ்நாட்டில் மின் உற்பத்தி அதிகளவில் நடைபெற்று இருப்பதால் மின் இருப்பு அதிகரித்து உள்ளது.
ஜூலை முதல் நவம்பர் வரையிலான 5 மாதம் தமிழ்நாட்டிற்கு தேவைப்படும் மின் அளவைவிட அதிக மின்சாரம் கையில் இருக்கும் என்றும் மத்திய மின்சார ஆணையம் எதிர்பார்க்கிறது.

ஜூலை மாதம் மின் இருப்பு
குறிப்பிட்ட இந்த காலக்கட்டத்தில் மெகாவாட், மில்லியன் யூனிட்கள் என்ற கணக்கில் கூடுதலாக மின்சாரம் இருக்கும் என்று அந்த அமைப்பு நம்புகிறது. ஜூலை மாதத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டில் மின் தேவை என்பது 16,100 MW ஆக உள்ளது. அதே நேரத்தில் இம்மாதம் மின் இருப்பு 17,183 MW ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

7 நாட்களில் 100 மில்லியன் யூனிட்
கடந்த ஜூலை 9 ஆம் தேதி, இது வரை இல்லாத அளவுக்கு காற்றாலை மூலமாக தமிழ்நாட்டு மின்வாரியம் 120.25 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது. இதன் மூலமாக தமிழ்நாட்டில் நுகரப்படும் மின்சாரத்தில் 35 சதவீதத்தை காற்றாலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பிடித்து உள்ளது. குறிப்பாக இம்மாதம் தொடர்ந்து 7 நாட்களில் 100 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தியாகி இருக்கிறது.

மின் தட்டுப்பாடு
கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் 388.078 மில்லியன் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் அதிகளவிலான மின் பயன்பாடு காரணமாக அடுத்த 2 மாதங்கள் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் செப்டம்பர் மாதத்தின் மத்திய பகுதி வரை தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிகையான மின்சாரம்
ஆகஸ்ட் மாதம் தமிழ்நாட்டில் 16,100 மெகா வாட் மின்சாரம் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதற்கான மின் இருப்பு தேவையை விட அதிகமாக 17,040 மெகாவாட் என்ற அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் மாத மின் தேவை சற்று குறைந்து 15,800 மெகா வாட்டாக இருக்கும் என்றும், அப்போது மின் இருப்பு 16,617 மெகா வாட்டாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர், நவம்பர்
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் மின்சார தேவை மேலும் குறைந்து 15,000 மெகா வாட் என்ற அளவில் தமிழ்நாடு முழுவதும் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதே நேரம் மின் இருப்பு மேலும் அதிகரித்து 17,375 மெகா வாட்டாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. நவம்பர் மாதம் மின் தேவை 14,400 ஆகவும் மின் இருப்பு 16,296 ஆகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

மின் உற்பத்தி திட்டங்கள்
தமிழ்நாடு மின்சார வாரியமான டான்ஜெட்கோவின் அனல் மின் நிலையம் 4,320 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. அத்துடன், மத்திய மின் உற்பத்தி நிலையங்கள், தனியாரிடம் வாங்கும் மின்சாரம் மற்றும் வழக்கமான உற்பத்தி செய்யப்படும் மின்சார அளவை சேர்த்தால் 16,652 மெகா வாட் மின்சாரம் இருக்கும். தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டங்களின் மூலமாக 17,225 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 8,615 மெகாவாட் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications