4 நாள்ல பாருங்க.. களமிறங்கிய 3 அமைச்சர்கள்.. எல்லா திசையிலும் பறந்த "ஆர்டர்".. ஸ்டாலின் செம உத்தரவு
சென்னை: தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்கு தடையாக இருக்கும் முக்கியமான சில பிரச்சனைகளுக்கு அடுத்த 4 நாட்களுக்குள் தீர்வு கொண்டு வரும் திட்டத்தில் தமிழக அரசு இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
தமிழகத்தில் புதிதாக பதவி ஏற்று இருக்கும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, முதல் நாளில் இருந்தே கொரோனாவிற்கு எதிராக சிறப்பாக முடிவுகளை எடுத்து வருகிறது. ஏகப்பட்ட சவால்கள் இருந்தாலும், முந்தைய அரசு செய்த பல தவறுகள் இடைஞ்சல்களை கொடுத்தாலும் கூட முதல்வர் ஸ்டாலின் முடிந்த அளவு துரிதமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
ஒரு வாரத்தில் கொரோனா எதிராக நிவாரண தொகை தொடங்கி சர்வதேச வேக்சின் டெண்டர் வரை பல்வேறு முக்கிய முடிவுகளை முதல்வர் ஸ்டாலின் துரிதமாக எடுத்து இருக்கிறார்.

எப்படி
தமிழக அரசின் முன் தற்போது இருக்கும் சில முக்கியமான சவால்கள் என்றால் அது ஆக்சிஜன் தேவை, ரெமிடிஸ்வர் தேவை, அதிக படுக்கைகள், கொரோனா டிபிஆர் சதவிகிதத்தை குறைப்பது. இந்த மூன்று விஷயங்களையும் அடுத்த 4 நாட்களுக்கு எப்படியாவது செய்துவிடுவோம் என்று தமிழக அரசு நம்பிக்கையாக இருக்கிறது. இது தொடர்பாக தலைமை செயலக வட்டாரத்தில் விசாரித்ததில், அடுத்த 4 நாட்களுக்குள் இதற்கு மொத்தமாக தீர்வு கொண்டு வரப்படும் என்று கூறுகிறார்கள்.

ஆக்சிஜன்
முதல் கட்டமாக தமிழக அரசு ஆக்சிஜன் மீதுதான் கவனம் செலுத்தி உள்ளது. ஒடிசா, மேற்கு வங்கம், மற்றும் சில வெளிநாடுகளில் ஆக்சிஜன் ஆர்டர் செய்யப்பட்டு ஏற்கனவே ஒடிசாவில் இருந்து ஆக்சிஜன் வந்துவிட்டது. இது போக வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் இந்த வாரம் வர உள்ளது. அதோடு சிங்கப்பூர்,மலேசியா, ஆம்ஸ்டர்டாமில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் கொள்கலன்கள் வாங்கப்பட்டு உள்ளன.

இறக்குமதி
சென்னைக்கு வரும் ஆக்சிஜனை மற்ற மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல இந்த சிலிண்டர்கள் வாங்கப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியில் ஆக்சிஜன் காலி சிலிண்டர் கூட கையிருப்பு இல்லாத காரணத்தால் தமிழக அரசு இந்த நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இதெல்லாம் போக தமிழகத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி பல இடங்களில் தொடங்கி உள்ளது. சேலம் ஆர்.ஆர்.நகர் ராம்கோ சிமிண்ட்ஸ் தொழிற்சாலையில் உற்பத்தி தொடங்கி உள்ளது.

தன்னிறைவு
இந்த ஆலை மூலம் நாள் ஒன்றுக்கு 42 முதல் 48 சிலிண்டர்கள் வரை ஆக்சிஜன் நிரப்பி அரசு மருத்துவமனைகளுக்கு அளிக்க முடியும். நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் மூடிக்கிடக்கும் ஆக்ஸிஜன் ஆலையில் மீண்டும் உற்பத்தி துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க பல்வேறு சிப்காட்டில் இதேபோல் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் இந்த வாரமே ஆக்சிஜன் தட்டுப்பாடு குறையும்.

அடுத்த வாரம்
அதன்பின் சில நாட்களில் உபரி ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் அளவிற்கு நிலைமை செல்லும் என்று மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரெமிடிஸ்வர் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில் தற்போது அந்த பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. இனி மக்கள் லைனில் நின்று ரெமிடிஸ்வர் வாங்க வேண்டியது இல்லை. நேரடியாக மருத்துவமனைகளுக்கே ரெமிடிஸ்வர் அளிக்கப்படும் என்பதால் அந்த தட்டுப்பாடு மொத்தமாக நீக்கப்படுகிறது.

படுக்கைகள்
படுக்கைகள் பிரச்சனை இப்போது இருந்தாலும் வரும் புதன் கிழமைக்குள் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்கள் அனைத்திலும் கூடுதலாக 10க்கும் அதிகமான சிகிச்சை மையங்கள் தற்காலிகமாக திறக்கப்பட உள்ளன. அதோடு சித்த மருத்துவ மையம், தனிமைப்படுத்தும் முகாம்கள் திறக்கப்பட உள்ளதால் படுக்கைகளுக்கான தேவைகள் புதன் கிழமைக்குள் சரியாகிவிடும் என்றும் கூறுகிறார்கள்.

டிபிஆர்
சென்னையில் தற்போது டிபிஆர் எனப்படும் கொரோனா பாசிட்டிவிட்டி ரேட் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லாக்டவுன் தீவிரமாக்கப்பட்டுள்ளதால் அடுத்த சில நாட்களில் மொத்தமாக சூழ்நிலை மாறும், ஆக்சிஜன் தேவை தொடங்கி புதிய கேஸ்கள் வரை எல்லாம் தலைகீழாக மாறும். நிலைமை சரியாகி வரும் என்றும் தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தகவல்
இவை எல்லாம் முதல்வர் ஸ்டாலினின் நேரடி உத்தரவின் பேரில் நடந்து வருகிறது. அதே சமயம் இந்த பணிகளில் நிதி ஒதுக்குவது, திட்டங்களை தீட்டுவது, களப்பணிகளை செய்வது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நிதி அமைச்சர் பிடிஆர், தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகிய மூன்று பேரும் முதல்வர் ஸ்டாலினுக்கு நல்ல உதவியாக இருந்து வருகிறார்கள். அதிலும் தங்கம் தென்னரசு கடந்த சில தினங்களாக பூட்டிக்கிட்டாங்க ஆக்சிஜன் ஆலைகள், பல தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க வைத்து அசத்தி இருக்கிறார்.

நிதி
அதேபோல் பல ஆர்டர்களை சிப்காட் மூலம் செய்து, இறக்குமதியை குவித்து உள்ளார். இன்னொரு பக்கம் நிதி அமைச்சர் பிடிஆர் செலவுகளை கட்டுப்படுத்தி வருகிறார். சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுக்கவே பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். இதனால்தான் அடுத்த 4 நாட்களில் நிலைமை சரியாகும் என்று மேலிட வட்டாரங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications