"போக்குவரத்து ஊழியர்களுக்கு.. எத்தனை சதவிகித ஊதிய உயர்வு?" அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முக்கிய தகவல்
சென்னை: போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து பயிற்சி முகாமில் நடைபெற்றது.
ஏற்கனவே நடைபெற்ற 3 கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் இன்று நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தை
மொத்தம் 66 தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் டாக்டர் கோபால், நிதித்துறை கூடுதல் செயலாளர் அருண் சுந்தர் தயாளன் ஐ.ஏ.எஸ். ஆகியோர் பங்கேற்றனர். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளில் ஏற்பட்டுள்ள உடன்பாடு குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

வாரிசுகளுக்கு வேலை
பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், "கடந்த 10 ஆண்டுகளாகவே போக்குவரத்துத் துறையில் பணியில் இருந்தபோதே, மரணமடைந்தோரின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படாமல் இருந்தது. இந்த கோரிக்கை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. முதல்வரின் உத்தரவின்படி, இதில் முதற்கட்டமாக, வரும் 14ஆம் தேதி இறந்துபோன போக்குவரத்து தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு முதல்வர் பணி ஆணை வழங்க உள்ளார்.

பேட்டா தொகை
கொரோனா காலத்தில் வேலை செய்தவர்களுக்குப் பேட்டா வழங்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதேபோல மகளிர் இலவச பயணம் செய்கின்ற பேருந்துகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பேட்டா தொகை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் அதுவும் நடைமுறைப்படுத்தப்படும். இவை தவிர 15 வகையான படிகளுக்கும் ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது.

85% உடன்பாடு
போக்குவரத்துத் துறையில் பல காலமாகப் பதவி உயர்வு பெறாமல் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு வழங்குவது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சங்கங்கள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளில் 85 விழுக்காட்டிற்கு ஒப்புதல் ஏற்பட்டுள்ளது. நிலுவையில் இருக்கும் ஓரிரு பிரச்சினைகளிலும் விரைவில் பேசி முடிவெடுக்கப்படும். பெண்களுக்கான ஒயிட் போர்ட் பேருந்துகள் குறைக்கப்பட்டதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை. சொல்லப்போனால், ஓயிட் போர்ட் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டே உள்ளது.

சம்பள உயர்வு
சம்பள உயர்வு விவகாரத்தில் இடைக்கால நிவாரணமாக 1000 ரூபாய் வழங்கி இருந்தனர். தற்போது அதில் 8 சதவீத சம்பள உயர்வு வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்திருந்தன. தமிழக அரசு சார்பாக முதற்கட்டமாக, கடந்த 1.9.2019-லிருந்து 2 சதவீத உயர்வும், 1.1.2022-லிருந்து அடுத்தகட்ட 3 சதவீத உயர்வும் என மொத்தமாக 5 சதவீதம் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளோம்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications