"அதிமுக இருக்கும் இடம் தெரியாமல் படுத்துவிட்டது! ஈபிஎஸ் விரக்தியில் உள்ளார்!" தங்கம் தென்னரசு பதிலடி
சென்னை: சட்ட ஒழுங்கு தொடங்கி கஞ்சா விற்பனை வரை பல்வேறு விவகாரங்களில் திமுக அரசை எடப்பாடி பழனிசாமி விமர்சித்து இருந்த நிலையில், இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் ஆறு ராஜ்சபா உறுப்பினர்களுக்குத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிடம் மூன்று வேட்பாளர் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர்.
இந்நிலையில் , அதிமுக சார்பில் போட்டியிடும் இரு வேட்பாளர்கள் இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

எடப்பாடி பழனிசாமி
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து ஓராண்டுக் காலத்திலே எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றும் பணிகளை தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து வருகிறார். திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சிதைந்து விட்டது. தலைநகரம். காவல்துறை ஆளும் திமுக அரசின் ஏவல் துறையாக மாறிவிட்டது எனக் கடுமையாகக் குற்றம் சாட்டினார். மேலும், மாநிலத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்து விட்டதாகவும் அவர் சாடி இருந்தார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி
இந்நிலையில், உண்மைக்கு மாறான தகவல்களை அளிப்பதாக எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "அதிமுகவிற்கு தேர்தலில் ஏற்பட்டிருக்கக் கூடிய தோல்விகளால் விரக்தியின் அடிப்படையில் திமுக அரசின் மீது அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார். தமிழக அரசியலில் அதிமுக இருக்கிற இடம் தெரியாமல் படுத்தே விட்டது. சசிகலா கூட இதைக் கூறியிருக்கிறார்.

திமுக அரசுத் திட்டங்கள்
எடப்பாடி பழனிச்சாமி தன் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக அவசர அவசரமாக இன்று காலை ஒரு பேட்டியைக் கொடுத்திருக்கிறார். அதில் தமிழ்நாடு அரசின் மீது பல அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார். இந்த ஓராண்டுக் காலத்தில் திமுக அரசு எண்ணற்ற பல சாதனைகளைச் செய்துள்ளது. நம்மை காக்கும் 48, இல்லம் தேடி கல்வி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், நான் முதல்வன் திட்டம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் ஆவின் பால் விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு, மகளிருக்கு இலவச பேருந்து, கொரோனா நிவாரண நிதி, இப்படி எண்ணற்ற பல திட்டங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் செய்து காட்டியுள்ளார்.

அவதூறுகள்
ஆனால் பூனைக் கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விட்டது என்பது போல எடப்பாடி பழனிசாமி இந்த உண்மைகளை மறைத்து அவதூறுகளை அள்ளி வீசியுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக அவர் குற்றம் சாட்டி இருக்கிறார். ஆனால் தமிழக அரசு சட்டம் ஒழுங்கை மிகச் சிறப்பாகப் பராமரித்து வருகிறது. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போய் கிடந்தது. திமுக ஆட்சியில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சட்ட ஒழுங்கு
திமுக ஆட்சியில் ஜாதி மதச் சண்டைகள் இல்லாமல் மிக அமைதியான மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. துப்பாக்கி கலாச்சாரம் முற்றிலுமாக அழித்து வைக்கப்பட்டுள்ளது. அதிமுக கடைசி ஓராண்டு ஆட்சியில் 1695 கொலைகள், 146 கொள்ளைகள், 30 கூலிப்படை கொலைகள், 16 போலீஸ் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. ஆனால் திமுக ஆட்சியில் இவையெல்லாம் குறைக்கப்பட்டுள்ளது. புள்ளி விவரங்களே அதிமுக திமுக ஆட்சிக்குச் சாட்சியாக உள்ளது.

போதைப்பொருள்
திமுக ஆட்சியில் போதைப்பொருட்கள் நடமாட்டம் கூட இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அதிமுக ஆட்சியில் குட்கா எந்தளவுக்கு இருந்தது என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். யார் வீட்டில் ரெய்டு நடந்தது, அதிமுக ஆட்சியில் காவல் துறைத் தலைவராக இருந்தவர் மீது வழக்குப் பாயவில்லையா?" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications