காந்தாரி, புளுகுமூட்டை, பாஜகவுக்காக நாடகம்- ஆளுநர்- இபிஎஸ் சந்திப்பு- அமைச்சர் தங்கம் தென்னரசு சாடல்
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக இபிஎஸ் கோஷ்டி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தது ஒரு நாடகம் என அமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையாக சாடியுள்ளார்.
சென்னையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்தார். இச்சந்திப்பின் போது தமிழகத்தில் ஆளும் திமுக அரசு மீது ஆளுநரிடம் பல்வேறு புகார்கள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்.
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து போய் விட்டது. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் தமிழக அரசு அலட்சியம் காட்டியதால் சம்பவம் நடந்துவிட்டது. தமிழக உளவுத்துறை கவனமாக செயல்படாத காரணத்தால் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடந்தது.
வார்த்தையை விட்ட எடப்பாடி.. அப்செட்டான பாஜக? திடீரென ஆர்என் ரவியை சந்தித்த இபிஎஸ்! 4 பரபர காரணங்கள்
திமுக மீது புகார்
தமிழகத்தில் மாணவர்களிடையேயான போதைப் பொருட்கள் புழக்கத்தை தமிழக அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் போதை பொருட்கள், அண்டை மாநிலங்களில் இருந்தும் கூட கிடைக்கிறது. தமிழகத்தில் ஆளும் திமுக ஆட்சியில் லஞ்சம் ஊழல் தலை விரித்தாடுகிறது என குற்றம்சாட்டி இருந்தார்.
உரிமை இருக்கிறதா?
இதற்கு தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் எடப்பாடி பழனிசாமி கொடுத்த புகார்கள் அனைத்துமே ஆதாரமே இல்லாதவை. துப்பாக்கிச் சூட்டில் 13 பேரை கொன்றவருக்கு, துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையே டிவியில் பார்த்து தெரிந்து கொண்டதாக சொன்ன எடப்பாடி பழனிசாமிக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேசுவதற்கு எல்லாம் உரிமையே கிடையாது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சாத்தான்குளம் கொலைகள், பொள்ளாச்சி சம்பவம் யார் ஆட்சியில் நடந்தது என்பதை மறந்துவிட்டாரா எடப்பாடி பழனிசாமி?
புளுகுமூட்டை, காந்தாரி
தமிழகத்தின் வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைத்தால் நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் எடப்பாடி பழனிசாமி புளுகுமூட்டைகளின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார். மழைவெள்ள பாதிப்பு, கோவை சம்பவங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள் குவிகின்றன. இதனை தாங்கிக் கொள்ள முடியாமல் காந்தாரி போல ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியிருக்கிறார் இபிஎஸ்.
பாஜக கருவி
அதிமுகவின் உட்கட்சி பூசலில் பாஜகவின் ஆதரவைப் பெறத்தான் இந்த சந்திப்பு நடந்துள்ளது. பாஜகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலை திசைதிருப்பும் கருவியாக எடப்பாடி பழனிசாமி - ஆளுநர் சந்திப்பு அமைந்திருக்கிறது. ஆளுநரை இபிஎஸ் சந்தித்ததே ஒரு நாடகம்தான். தமிழக சட்டம் ஒழுங்கு விவகாரம் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு கையில் ஆதாரம் இருந்தால் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்துக்குப் போகலாம். தமிழகத்தில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு உள்ளது என பொய்யான தகவலை பரப்பிவிடுகிறார் இபிஎஸ். இவ்வாறு தங்கம் தென்னரசு சாடியுள்ளார்.