முழு ஊரடங்கு, ஆய்வாளர்கள் அறிவுரை.. எதையும் காதில் வாங்காமல் சுற்று நபர்களால் தமிழகத்தில் பேராபத்து
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள போதும், பலர் இன்னும் பொறுப்பில்லாமல் வெளியே சுற்றி வருவது, அவர்களுக்கு மட்டுமின்றி சுற்றியிருப்பவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
கொரோனா வைரசின் 2ஆம் அலை - இது தான் கடந்த சில வாரங்களாகவே நாட்டின் முக்கிய பேசுபொருள். நாட்டில் வைரஸ் பாதிப்பும் உயிரிழப்புகளும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கொரோனா முதல் அலையில் தப்பிய மாநிலங்கள்கூட 2ஆம் அலையில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இங்கு வைரஸ் பாதிப்பு மிக மோசமாகச் செல்லவில்லை. கொரோனா பாதிப்பும் சரி, உயிரிழப்பும் சரி ஓரளவு கட்டுக்குள் தான் இருந்தது. கடந்த ஆண்டு இறுதியில் குறையத் தொடங்கிய கொரோனா ஒரு கட்டத்தில் 5000க்கும் கீழ் கூட குறைந்தது. ஆனால், தேர்தல் நெருங்க நெருங்க நிலைமை மெல்ல மாறியது.

காரணம் தேர்தலா?
தேர்தல் பிரசாரம், பேரணி ஆகியவற்றில் அதிகளவிலான மக்கள் மாஸ்க்குகளை அணியாமல் ஒன்றுகூடத் தொடங்கினர். இதன் பின்னர் மாநிலத்தில் கொரோனா பாதிப்பும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால், தேர்தலை மட்டும் இதற்குக் காரணம் எனக் கூற முடியாது. இந்த கொரோனா வைரஸ் அலை அலையாகவே பரவும். தேர்தல் இல்லாத மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் வைரஸ் பரவல் அதிகரித்ததை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 2ஆம் அலையின் தாக்கத்தைத் தேர்தல் முன்கூட்டியே ஏற்படுத்திவிட்டது என்றே கூற வேண்டும். இருப்பினும், இரு மாநிலங்களிலும் கொரோனா 2ஆம் அலையைக் கருத்தில் கொண்டு ஓரளவு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கப்பட்டிருந்தன. இருந்தாலும்கூட வைரஸ் பாதிப்பு எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகரித்தது.

மீண்டும் லாக்டவுன்
இதனால் காரணமாகத் தமிழ்நாட்டில் கடந்த 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் நேரக் கட்டுப்பாட்டுடன் செயல்பட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மத ரீதியிலான இடங்கள் மூடப்பட்டுள்ளன.

பலன் தருகிறதா?
கொரோனா ஊரடங்கு அமல்படுத்தும் முன் வைரஸ் பரவல் 10% வரை அதிகரித்தது. கொரோனா பரவலின் வேகம் என்பது ஊரடங்கிற்குப் பிறகுச் சற்று குறைந்துள்ளது. கடந்த மே 9ஆம் தேதி மாநிலத்தில் 28,897 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து, மே 10ஆம் தேதி 28,978 பேருக்கும் மே 11ஆம் தேதி 29,272 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
ஆனாலும், வெறும் சில நாட்களின் தரவுகளை வைத்துக் கொண்டு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துவிட்டதாகக் கூற முடியாது. இன்னும் சில நாட்கள் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், முன்பு கணிக்கப்பட்டதை விட மகாராஷ்டிரா சிறப்பாகச் செயல்படுவதாகவும், ஆனால் அதேநேரம் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கணிக்கப்பட்டதைவிட மிக மோசமாகச் செயல்படுவதாகவும் இந்திய அறிவியல் நிறுவனமும் எச்சரித்துள்ளது.

ஆள்நடமாட்டம் குறையவில்லை
தமிழகத்தில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட போதிலும் கூட வெளியே மக்கள் நடமாட்டம் குறையவில்லை. பலர் இன்னும் மாஸ்க் கூட அணியாமல் வெளியில் வரத்தான் செய்கின்றனர், குறிப்பாக இளைஞர்கள். இவர்கள் கட்டுக்குள் வந்தால்தான் முழுமையான பலன் கிடைக்கும். அரசு என்னதான் நடைமுறைகளை அமல்படுத்தினாலும், அதை வெற்றி அடைய வைப்பது மக்களின் கைகளில்தான் உள்ளது. எனவே மக்கள் தாங்களே வீட்டுக்குள் இருந்து இந்த லாக்டவுனை முழுமையாக அமல்படுத்த உதவினால் மட்டுமே கொரோனா கட்டுக்குள் வரும்.












Click it and Unblock the Notifications