தனியார் வேலை மோகம்.. ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளில் குறையும் தமிழர் எண்ணிக்கை! யுபிஎஸ்சி தேர்வில் பின்னடைவு
சென்னை: பள்ளிக்கல்வி, உயர்கல்வி, ஆராய்ச்சி படிப்புகளில் மற்ற மாநிலங்களை விட பன்மடங்கு முன்னிலையில் இருக்கும் தமிழ்நாட்டிலிருந்து யுபிஎஸ்சி தேர்வில் தேர்வானவர்கள் விகிதம் வெறும் 3 சதவீதமாக சரிந்து இருக்கிறது.
பள்ளிக்கல்வி முடிந்து உயர்கல்விக்கு செல்வோரின் GER விகிதம் தேசிய அளவில் 27.1 சதவீதமாக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அது 51.4 சதவீதமாக உயர்ந்து நிற்கிறது.
இந்தியாவிலேயே GER சதவீதத்தை அதிகம் வைத்திருக்கும் மாநிலம் என்ற பெருமையை கொண்டிருக்கிறது தமிழ்நாடு.

கல்வியில் தலைசிறந்த தமிழ்நாடு
புதிய கல்விக் கொள்கையில் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட GER சதவீதத்தை தமிழ்நாடு எப்போதோ தாண்டிவிட்டது. அதேபோல் NIRF எனப்படும் தேசிய கல்வி நிறுவனங்களுக்காக தரவரிசையில் தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்கள் முன்னிலை வகித்து வருகின்றன. நாடு முழுவதிலிருந்து ஏராளமான பிற மாநில மாணவர்கள் தமிழ்நாட்டிற்கு கல்வி கற்க வருகை தருகிறார்கள்.

யுபிஎஸ்சி தேர்வில் பின்னடைவு
நிலைமை இப்படி இருக்க, தேசிய அளவில் மத்திய அரசால் நடத்தப்படும் தகுதித் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வுகளில் தமிழ்நாடு பின் தங்கும் அவலம் தொடர் கதையாகி இருக்கிறது. குறிப்பாக அரசு துறைகளில் உச்சபட்ச அதிகாரங்களை கொண்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். உள்ளிட்ட பணிகளுக்காக நடத்தப்படும் யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாடு மிக மோசமான நிலையில் இருந்து வருகிறது.

27 பேர் மட்டுமே தேர்ச்சி
இந்த ஆண்டு வெளியான யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகளில் 685 மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். அவர்களில் வெறும் 27 பேர் மட்டுமே தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவலை ஒரு நொடி நம்மால் ஏற்க முடியவில்லை. கடந்த ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சியடைந்தவர்கள் விகிதம் 5 ஆக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு அது 3 சதவீதமாக சுருங்கி இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகள் தமிழ்நாட்டின் மிகக்குறைவான தேர்ச்சி வகிதம் இதுதான்.

2014ல் 11% தேர்ச்சி
இது தொடர்பாக மாநில அரசிடம் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை என்றாலும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் யுபிஎஸ்சி பயிற்சி மையங்கள் வழங்கிய தரவுகளின் அடிப்படையில் இந்த சரிவு தெரியவந்திருக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சியடைந்த 1,126 பேரில் 119 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். அதாவது 11 சதவீதம். கடந்த 2017 ஆம் ஆண்டு தேர்ச்சியடைந்தவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 7 சதவீதம். 2019 ஆம் ஆண்டு இது 6.69% ஆக சரிந்தது.

தமிழ் புத்தகங்கள் குறைவு
இப்படி கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக மாறி இருக்கிறது யுபிஎஸ்சியில் தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம். இவ்வளவுக்கும் தமிழ்நாட்டில்தான் தலைசிறந்த நூலகங்கள் உள்ளன. ஆசியாவின் மிகப்பெரிய நூலகம் என்று கருதப்படும் சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் படித்தே பலர் யுபிஎஸ்சியில் தேர்ச்சியடைந்தனர். அதே நேரம் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராவதற்கு தேவையான புத்தகங்கள் தமிழில் இல்லாததும், ஆங்கிலத்தில் தமிழ்நாடு மாணவர்கள் புலமை பெறாததும் இதற்கான மற்றொரு காரணமாக கூறப்படுகிறது.

தனியார் நிறுவன பணிகள்
இதற்கு மற்றுமொரு முக்கிய காரணமாக சொல்லப்படுவது தற்போதைய இளைய தலைமுறை தனியார் நிறுவன பணிகளின் மீது கொண்ட நாட்டம். படித்தவுடன் வேலை, நல்ல ஊதியம், ஊதிய உயர்வு, வெளிநாட்டில் வேலை வாய்ப்பு போன்றவை அரசு பணிகளின் மீதான ஆர்வத்தை இழக்க வைத்து விடுவதாக கூறப்படுகிறது. வங்கிக் கடன் பெற்று உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பலர் அந்த கடனை அடைப்பதற்காகவே அரசு பணிக்காக தேர்வெழுதி காத்திருக்காமல் உடனடியாக தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர விரும்புவதும் கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications