கோ-எட் பள்ளிகளில் படிங்கப்பா.. லைஃப் நல்லா இருக்கும்.. பிளஸ் 2 ரிசல்ட்ட பாருங்க
Recommended Video
சென்னை: இருபாலர் பயிலக்கூடிய பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம், கூடுதலாக இருப்பது கல்வியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணாக்கர்கள் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த தேர்தல் முடிவுகளில், இரு பாலர் பள்ளிகளில் பயின்றவர்கள் எத்தனை சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெண்கள் பள்ளியில், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மற்றும் ஆண்கள் மட்டுமே பயிலக்கூடிய பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் எவ்வளவு என்பது போன்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

இரு பாலர் பள்ளிகள்
இதில், இருபாலர் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருப்பதும், ஆண்கள் மட்டுமே பயிலக்கூடிய பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதும் தெரியவருகிறது. பெரும்பாலானோருக்கு இது குறித்த தகவல் இருந்தபோதும், புள்ளி விவரத்துடன் அந்த தகவல் உறுதியாகியுள்ளது.

தேர்ச்சி விகிதம்
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் பாருங்கள்: இருபாலர் பள்ளிகள் - 91.67%, பெண்கள் பள்ளி - 93.75. ஆண்கள் பள்ளி - 83.47% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்ச்சி விகிதத்தை வைத்து கவனிக்கும் போது, ஆண்கள் மட்டுமே பயிலக்கூடிய பள்ளிகளில் எந்த அளவுக்கு குறைவாக தேர்ச்சி உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

மாணவர்கள் மனநிலை
மாணவிகளுடன் ஒரே பள்ளியில் கல்வி கற்கும் மாணவர்கள்தான் அதிகமாக தேர்ச்சி பெறுகிறார்கள். இதற்கு உளவியலாக பல்வேறு காரணங்கள் இருப்பதாக கல்வியாளர்கள் கருதுகிறார்கள். மாணவிகள் முன்னிலையில் கல்வி கற்காமல் அவமானப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற உந்துதல் காரணமாக இயல்பாக மாணவர்கள் ஆர்வத்தோடு படிப்பதற்கான வாய்ப்பு, இருபாலர் பயிலும் பள்ளிகளில்தான் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

மாணவிகள்
அதேநேரம் பெண்கள் மட்டுமே பயிலக்கூடிய பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், 93.75 என்ற அளவில் அதிகமாக உள்ளது. அதாவது ஆண்கள் மட்டுமே பயில கூடிய பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தோடு ஒப்பிட்டால் இது நேர் எதிர். இதற்கு காரணம், ஆண் நண்பர்களின் கவனச்சிதறல்கள் இல்லாதது, பெண்கள் நடுவேயான போட்டி மனப்பான்மை போன்றவை காரணமாக கூறப்படுகிறது. இதனால் பெண்கள் மட்டுமே பயிலக்கூடிய பள்ளிகள் பெண் பிள்ளைகளுக்கு வரப் பிரசாதமாக பார்க்கப்படுகிறது.

கோரிக்கை
ஆனால் மாணவர்களையும் தேர்ச்சி பெற வைக்க வேண்டுமே. இரு தரப்பையும் மேம்படுத்துவதுதானே நல்ல கல்வியாளர்கள் பணி. எனவே, இருபாலர் பயிலும் பள்ளிகளை அதிகரிக்க வேண்டும். மாணவர்கள் மட்டுமே பயிலக்கூடிய பள்ளிகள் அவர்களின் கல்வித் தரத்தை பாதிக்கிறது என்பது புள்ளிவிவரத்துடன் உறுதியாகி உள்ளதால், இதை ஆட்சியாளர்களும், கல்வியாளர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும், என்பது கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications