இறுகும் போலீஸின் பிடி.. தலைமறைவாக உள்ள பப்ஜி மதன் மீது... 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சென்னை: தற்போது தலைமறைவாக உள்ள யூடியூபர் பப்ஜி மதன் மீது பெண்களை ஆபாசமாகப் பேசியது, தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Recommended Video
பப்ஜி வீடியோ கேம் குறித்த ட்ரிக்குகள் விளக்கி தனது யூடியூப் தளத்தில் வெளியிட்ட வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் பப்ஜி மதன். யூடியூப் தளத்தில் தனது கேமை நேரலையில் ஒளிபரப்பும் இவர் அந்த விளையாட்டின் நுட்பங்களை விளக்குவார்.
இருப்பினும், நேரலையிலேயே பெண்களை மிகவும் ஆபாசமாகவும் அருவெறுக்கதக்க வகையிலும் வசைபாடிக் கொண்டே விளையாடுவார். பெண்கள் மட்டுமின்றி சிறுமிகள் குறித்தும் ஆபாசமாகப் பேசுவதை இவர் வழக்கமாக வைத்துள்ளார். இது குறித்து யாராவது கேட்டால், அவர்களையும் அதேபோல வசைபாடுவார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பப்ஜி மதன் மீது புளியந்தோப்பு சைபர் க்ரைம் பிரிவில் இருவர் புகார் அளித்திருந்தனர். இந்த புகார் குறித்து விசாரணை நடத்த பப்ஜி மதனை நேரில் ஆஜராகும்படி போலீசார் தெரிவித்திருந்தனர். இருப்பினும் காவல் நிலையத்திற்கு வராமல் தலைமறைவானார் பப்ஜி மதன்.
தற்போது போலீசார் பப்ஜி மதனை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்நிலையில், தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண்களை ஆபாசமாகச் சித்தரித்துப் பேசுதல், ஆபாசமாகப் பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.