இன்னொரு தீரன்.. அரியானாவில் தமிழ்நாடு போலீஸ் அதிரடி.. உயிரை பணயம் வைத்து 4 பேரை பிடித்து சபாஷ்!
சென்னை : ஏடிஎம் கொள்ளையர்களை பிடிக்க தீரன் பட பாணியில் களம் இறங்கி வேலை செய்திருக்கிறது தமிழ்நாடு போலீஸ். சென்னை தி.நகர் துணை காவல் ஆணையர் தலைமையிலான தனிப்படையின் முயற்சிகள் அசாத்தியமானது. கொள்ளை கும்பலை சென்னை போலீஸ் எப்படி பிடித்தது என்பதை இப்போது பார்ப்போம்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி இருந்த நேரத்தில் சென்னைக்கு விமானம் மூலம் தலா 8 பேர் கொண்ட நான்கு கொள்ளை கும்பல் வந்திரங்கியது.
சென்னை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்களில் 21 ஏடிஎம்களை குறிவைத்து களம் இறங்கி உள்ளது கொள்ளை கும்பல். அதுவும் எப்படி என்றால் ஜப்பான் நிறுவனம் தயாரித்து பொறுத்தப்பட்டிருந்த ஓகேஏ என்ற பணம் டெபாசிட் ஏடிஎம் மிஷின்களில் குறிவைத்து கொள்ளையை அரங்கேற்றி உள்ளது இந்த கும்பல்.

ஒரு கோடி கொள்ளை
கடந்த 18ம் தேதி வரை சுமார் ஒரு கோடி ரூபாய் வரை சுருட்டிய கொள்ளை கும்பல், சொந்த மாநிலமான ஹரியானாவிற்கு விமானத்தில் பறந்து சென்றது. வங்கி ஏடிஎம் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் களம் இறக்கப்பட்டனர். தி.நகர் துணை காவல் ஆணையர் தலைமையில் தனிப்படை போலீசார் களம் இறக்கப்பட்டனர்.

வாடகை பைக்
கண்காணிப்பு கேமரா பதிவினை கொண்டு, கொள்ளையர்கள் வந்த வாகனத்தை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர் கோடம்பாக்கத்தில் உள்ள இருசக்கர வாகனத்தை வாடகைக்கு விடும் நிறுவனத்திடம் இருந்து கொள்ளையர்களின் அடையாள அட்டையை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் கொள்ளையர்களை பிடிக்க துப்பறிந்தது நிச்சயம் திரில் சினிமா ரகம் தான்,

அரியானா
அடையாள முகவரியை வைத்து தேடியதில் கொள்ளையர்களின் முகவரி அரியானா மாநிலம் மேவாக் மற்றும் அதன் சுற்றுவட்டாரம் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அரியானா சென்ற சென்னை போலீஸ் தனிப்படை மேவாக்கில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 120 கிராமங்களை சோதனையிட முடிவு செய்தனர்.

கொள்ளையர்கள் பிளான்
அரியானா சிறப்பு அதிரடிப்படையின் உதவியுடன் இரண்டு முறை நடத்திய சோதனையின் போது, பெண்கள் மற்றும் முதியவர்களை முன்னிறுத்தி போலீசை முறியடித்தனர் கொள்ளையர்கள். கிராம மக்கள் போலீசாரை தாக்க முயன்றதால், கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சிகள் முதலில் தோல்வியில் முடிந்தது.
ஆனாலும் அசராத தமிழ்நாடு போலீஸ், சளைக்காமல் வீயூகத்தை மாற்றி கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேவாக் சுற்றுவட்டாரப்பகுதிகளை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ரகசிய கண்காணிப்பு கேமராக்களின் கீழ் கொண்டுவந்தனர்.

காத்திருந்து கைது
குற்றவாளிகள் அவர்களாகவே வெளியே வரும் வரை போலீசார் காத்திருந்தனர். தீரன் பாடன் படத்தில் பீடா கடைக்காரர் கொடுக்கும் துப்பை வைத்து எப்படி பொறிவைத்து பிடிக்க காத்திருந்தார்களோ அது போல் கேமராவை வைத்தபடி போலீசார் அவர்கள் வெளியே வரும் வரை காத்திருந்தனர், 23ம் தேதி வெளியே வந்தான் கொள்ளையர்களில் ஒருவனான அமீர் அர்ஷ்,. அவனை சுற்றி வளைத்து கைது செய்தது தனிப்படை.

ஏமாந்தான்
அமீர் அர்ஷ், அளித்த தகவலை வைத்து கூட்டாளி வீரேந்திர சிங் ராவத்தை பிடிக்க திட்டமிட்டனர். ஆனால் போலீஸ் வேட்டையை மோப்பம் பிடித்த வீரேந்திர சிங் ராவத், தங்கியிருந்த இடத்தை விட்டு வெளியே வரவில்லை.இதனால் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் போலீசார் சொந்த ஊருக்கு திரும்புவதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினர் . இதை உண்மை என்று நம்பி ஏமாந்த வீரேந்தர், தனது பழைய செல்போனில் சிம் கார்டை மாற்றிவிட்டு, புதிய சிம் கார்டை ஆன் செய்தான். அப்போது அவன் இருக்கும் இடத்தை தடயமாக கண்டுபிடித்த போலீசார் வீரேந்தரை பிடித்து மடக்கி கைது செய்தனர்.

முக்கிய தலைவன்
வீரேந்தரனிடம் நடத்திய விசாரணைக்கு பின்னர் லஜன் ஹூசைன் என்ற மற்றொரு கொள்ளையனை கைது செய்தனர். கடைசியில் இவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் கொள்ளை கும்பலின் தலைவர்களில் ஒருவனான சவுரவ் அலியையும் போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே 3 பேரை சென்னைக்கு கொண்டுவந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார் சவுரவ் அலியையும் சென்னைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இன்னும் பல கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications