தமிழகத்தில் 2ஆவது நாளாக 1000க்கும் கீழ் தினசரி வைரஸ் பாதிப்பு.. சென்னை & கோவையில் என்ன நிலை தெரியுமா
சென்னை: தமிழ்நாட்டில் 2ஆவது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு இன்னும் 1000க்கும் கீழாகப் பதிவாகியுள்ளது. இன்றைய தினம் 2 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100க்கு கீழ் உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த பல வாரங்களாகவே வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கொரோனா ஊரடங்கு வரும் நவ. 15ஆம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலம் என்பதாலும் கூடுதல் தளர்வுகளாலும் எங்கு வைரஸ் பாதிப்பு அதிகரிக்குமோ என அஞ்சப்பட்டது. இருப்பினும், வைரஸ் பாதிப்பு தொடர்ந்து கட்டுக்குள்ளேயே உள்ளது

தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் இன்று 2ஆவது நாளாக வைரஸ் பாதிப்பு 1000க்கு கீழ் பதிவாகியுள்ளது. நேற்று மாநிலத்தில் 990 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், இன்று அது மேலும் குறைந்து 973ஆகப் பதிவாகியுள்ளது. இன்று மொத்தம் 1.15 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 973 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 27,04,586 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

பாசிட்டிவ் விகிதம்
அதேபோல கொரோனா பாசிட்டிவ் விகிதமும் தொடர்ந்து கட்டுக்குள்ளேயே இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே மாநிலத்தின் சராசரி பாசிட்டிவ் விகிதம் 0.8%ஆக உள்ளது. அதிகபட்சமாக்கத் திருப்பூரில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 1.6%. ஆக உள்ளது. கோவை, செங்கல்பட்டு என மொத்தம் 9 மாவட்டங்களில் மட்டுமே பாசிட்டிவ் விகிதம் 1க்கு மேல் உள்ளது. தலைநகர் சென்னையில் பாசிட்டிவ் விகிதம் 0.6%ஆகவே தொடர்கிறது.

கொரோனா உயிரிழப்புகள்
கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 21 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 5 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 16 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். அதிகபட்சமாகத் தலைநகர் சென்னையில் 5 பேரும் செங்கல்பட்டு. தஞ்சை மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் தலா 2 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில் 36,157 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
அதேபோல ஆக்டிவ் கேஸ்களும் தொடர்ந்து குறைந்து வருவது நல்ல ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது. நேற்று மொத்தம் 11,309ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை இன்றைய தினம் 11,147ஆகக் குறைந்துள்ளது மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 1,114 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 26,57,282 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு
அனைத்து மாவட்டங்களிலுமே கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வருகிறது. தலைநகர் சென்னையில் 109 பேருக்கும் கோவையில் 114 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதேபோல செங்கல்பட்டில் 84 பேருக்கும் ஈரோட்டில் 71 பேருக்கும் திருப்பூரில் 65 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோவைத் தவிர வேறு எந்த மாவட்டத்திலும் வைரஸ் பாதிப்பு 100ஐ தாண்டவில்லை. கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications