காலாண்டு விடுமுறையில் ட்ரிக்.. பாவம் நம்ம ஸ்கூல் பசங்க! இப்படி பண்ணிட்டாங்களே தமிழ்நாடு அரசு
சென்னை: தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களை பார்த்த பள்ளி மாணவர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளார்கள். ஏன் இந்த சோகம்? விரிவாக பார்ப்போம்.
பொதுவாகவே விடுமுறை என்றால் யாருக்குதான் மகிழ்ச்சி இருக்காது. டென்சனை விட்டுவிட்டு மனம்போன போக்கில் குடும்பத்தினர், நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது, சுற்றுலா செல்வது, பிடித்த உணவை சமைத்து சாப்பிடுவது, விளையாடுவது என ஒவ்வொருவருக்கும் விடுமுறை என்பது ஏதோ ஒரு வகையில் ஸ்பெஷலாக இருக்கும்.

உடலியல் சார்ந்த நோய்களுக்கு இணையாக உளவியல் நோய்களையும் கவனத்தில் கொள்ள வேண்டிய இந்த காலத்தில் விடுமுறை என்பதை வீணான காலம் என்று கருதாமல் அது ஒவ்வொரு மனிதனுக்கான அடிப்படை உரிமையாக மதிக்க வேண்டும் என பல மனநல நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பொதுவாகவே பள்ளி, கல்லூரி காலங்களில்தான் நாம் அதிகளவிலான விடுமுறையை அனுபவிக்க முடியும். வேலைக்கு சென்ற பிறகு அதற்கான வாய்ப்புகள் குறைந்துவிடும். ஆனால், தற்போது பள்ளி, கல்லூரிகளிலும் பல்வேறு காரணங்களை காட்டி விடுமுறை நாட்கள் குறைக்கப்படுகின்றன. பள்ளிகளில் முழு ஆண்டு விடுமுறை, காலாண்டு விடுமுறை, அரையாண்டு விடுமுறை, பண்டிகை கால விடுமுறை என பல விடுமுறைகள் கிடைக்கும்.
குறிப்பாக காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகளுக்காக படித்து கலைத்த மாணவர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கவும், ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்தவும் தேர்வு முடிந்த பிறகு ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை காலாண்டு, அரையாண்டு விடுமுறைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால், கொரோனா ஊரடங்கிற்கு பிறகு திறக்கப்பட்ட பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு விடுமுறை நாட்கள் 5 ஆம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு 5 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளன. அதிலும் வீட்டுப் பாடத்தை கொடுத்து ஆசிரியர்கள் விடுமுறையை பறித்துவிடுவதாக மாணவர்கள் குற்றம்சாட்டுவது உண்டு.
இந்த நிலையில்தான் தற்போது காலாண்டு தேர்வு விடுமுறைகளுக்கான நாட்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும். 11, 12 ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதியும், 6 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 18 ஆம் தேதியும் காலாண்டுத் தேர்வுகள் தொடங்குகின்றன.
செப்டம்பர் 27 ஆம் தேதி தேர்வுகள் நிறைவடைந்த பின்னர், செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வுக்கு விடுமுறை விடப்படுகிறது. அக்டோபர் 3 ஆம் தேதி காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்." என அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த விடுமுறை அறிவிப்பை பார்த்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நினைத்தால், அதிர்ச்சியடைந்து உள்ளார்கள். அதற்கு காரணம் பள்ளிக்கல்வித்துறையின் சூட்சமம்தான். ஆம், விடுமுறை தொடங்கும் முதல் நாளான செப்டம்பர் 28 மீலாடி நபி விடுமுறை. செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகள் சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை. அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி.
ஆகமொத்தம் செப்டம்பர் 29 ஆம் தேதி மட்டுமே காலாண்டு விடுமுறையாக கருதப்படும். மற்ற நாட்கள் என்பது காலாண்டு தேர்வே நடக்காவிட்டாலும் விடுமுறையாகவே இருக்கும். இதுதான் மாணவர்களை சோகமடைய செய்துள்ளது. கடும் வெப்பம் காரணமாக கோடை விடுமுறை காலம் நீட்டிக்கப்பட்டதால் இவ்வாறு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications