தமிழ்நாடு நாள் நாளை கொண்டாட்டம்...பள்ளிகளில் தமிழ்நாடு வரலாற்று சுவரொட்டிகளை காட்சிப்படுத்த உத்தரவு
சென்னை: 'தமிழ்நாடு நாள்' நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு உருவான வரலாறு தொடர்பான சுவரொட்டிகளை அனைத்துப் பள்ளிகளிலும் காட்சிப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
Recommended Video
மறைந்த முதல்வர் பேரறிஞர் அண்ணாவால், மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை, கடந்த 1967 - ஆம் ஆண்டு ஜூலை 18 -ஆம் தேதி சட்டபேரவையில், தமிழ்நாடு என பெயர் மாற்றம் அறிவிக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. அண்ணாவால் தமிழ்நாடு என அறிவித்து தீர்மானமாக கொண்டுவரப்பட்ட அந்த நாள், தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என தற்போதைய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அந்த வகையில், நடப்பாண்டு, தமிழ்நாடு நாள், நாளை கொண்டாடப்படுகிறது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: பள்ளிகளில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடுவது குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து தமிழ்நாடு உருவான வரலாறு தொடர்பான முக்கிய சுவரொட்டிகள் தயார் செய்து அனைத்து பள்ளிகளிலும் காட்சிப்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. இதற்கான சுவரொட்டிகள் செய்தி-மக்கள் தொடர்புத் துறையிடமிருந்து பெறப்பட்டு அவை மின்னஞ்சல் மூலமாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
இவற்றை பள்ளிகளில் நாளை, காட்சிப்படுத்தும் வகையில் அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தமிழக அரசின் சார்பில் 'தமிழ்நாடு நாள் விழா' நாளை சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். சென்னை கலைவாணர் அரங்கத்தில், நாளை காலை 11.30 மணியளவில் நடைபெறும் இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விழா பேருரையாற்றுகிறார். இதில் கருத்தரங்கம், செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக குறும்படம் திரையிடல் மற்றும் விழா சிறப்பு மலர் வெளியிடப்படுகிறது.
விழாவை முன்னிட்டு மாநில அளவில் நடந்த பேச்சு போட்டி, கவிதை போட்டி, கட்டுரை போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
இதேபோல், தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில், இலக்கிய மாமணி விருது 2021, தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது-2021, கபிலர் விருது-2021, உ.வே.சா விருது - 2021, அம்மா இலக்கிய விருது - 2021, காரைக்கால் அம்மையார் விருது - 2021 ஆகிய விருதுகளும் வழங்கப்படுகின்றன.
சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு நாள் சிறப்பு மணற்சிற்பம் மற்றும் கலைவாணர் அரங்கில் சிறப்பு கண்காட்சியும் நடைபெறவுள்ளது. இதை பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள், 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை மூன்று நாட்கள் கண்டுகளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications