கொரோனா தடுப்பூசிகள்... மத்திய அரசால் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது: டி.ஆர். பாலு குற்றச்சாட்டு
சென்னை: கொரோனா தடுப்பூசிகள் விநியோகத்தில் மத்திய அரசால் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்று திமுக பொருளாளரும் அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர். பாலு குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அடுத்த 4 மாதங்களுக்கு மொத்தம் 10 கோடி தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் டி.ஆர். பாலு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தனுக்கு டி.ஆர். பாலு எழுதிய கடிதம்:
கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வரும் இக்கட்டான நேரத்தில் மத்திய அரசால் தமிழகத்துக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் அளவை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்று கடந்த 20-ந் தேதி நேரில் சந்தித்து தமிழக முதல்வர் சார்பில் கேட்டிருந்தேன். மத்திய அரசு வழங்கிய 91.34 லட்சம் தடுப்பூசிகளில் 72.12 லட்சம் தடுப்பூசி மருந்துகள், தமிழக மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.

மனிதவள இழப்பு
18 வயதுக்கு மேற்பட்ட 3.65 கோடி தமிழக மக்களுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். ஒருநாளைக்கு 1.50 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டாலும் 5 கோடி தமிழக மக்களுக்காவது செலுத்த பல மாதங்களாகும் நிலையில் மீளாத மனிதவள இழப்புக்கு தமிழகம் உள்ளாக நேரிடும்.

தமிழக பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் ஏற்கனவே 20,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நாள் ஒன்றுக்கு 36,000க்கும் அதிகமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் பற்றாக்குறை
ஆனால் தடுப்பூசி மருந்துகளுக்கான பற்றாக்குறை மட்டும் அதிகரித்து வருகிறது. கேரளாவுக்கு 88.69 லட்சம் தடுப்பூசிகளும் மத்திய பிரதேசத்துக்கு 1.01 கோடி தடுப்பூசிகளும் ராஜஸ்தானுக்கு 1.61 கோடிகள் தடுப்பூசிகளும் குஜராத்துக்கு 1.62 கோடி தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன.

மத்திய அரசால் புறக்கணிப்பு
தமிழ்நாடு மிகப் பெருமளவில் கொரோனா நோய் தொற்று நிவாரணத்தில், மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் நோய்த் தொற்றின் வேகம் குறைந்து வரும் நிலையில் இப்போதாவது தமிழகத்துக்கான தடுப்பூசி மருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்து வழங்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும்.

4 மாதங்களுக்கு 10 கோடி தடுப்பூசிகள்
மிக மிக கவலைக்கிடமான நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட தமிழக மக்களுக்கு 2.5 கோடி தடுப்பூசி மருந்துகள் வீதம், அடுத்த 4 மாதங்களுக்கு 10 கோடி தடுப்பூசி மருந்துகளை வழங்க மத்திய அரசு உடனடியாக ஆவண செய்ய வேண்டும். மேலும் தமிழகம் இறக்குமதி செய்யும் தடுப்பூசி மருந்துகளுக்கு 100% நிதி உதவியை மத்திய அரசு வழங்க வேண்டும். இவ்வாறு டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications