தமிழகத்தில் ஆகஸ்ட் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படலாம்- மாநில தேர்தல் ஆணையம்
சென்னை: தமிழகத்தில் ஆகஸ்ட் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இதனால் மக்கள் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி தொடர்பான பிரச்சினைகளை மக்கள் யாரிடம் புகார் தெரிவிப்பது என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி மதுரையை சேர்ந்த கே கே ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது மாநில தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பதில் அளித்தது. அதில் வார்டு வரையறை பணி முடியும் தருவாயில் உள்ளது என பதில் அளித்திருந்தது.

சட்டசபை தேர்தல்
இந்த நிலையில் இந்த வழக்கில் கடந்த 4-ஆம் தேதி தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில் "மக்களவை தேர்தல் தற்போது நடந்து முடிந்துள்ளது. 22 தொகுதி மாநில சட்டசபை தேர்தலில் 4 தொகுதிகளுக்கு மட்டும் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது.

அழுத்தம் திருத்தமாக கூறிய தமிழக அரசு
எனவே உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த சாத்தியமில்லை. இதனால் மாநில தேர்தல் ஆணையம் விடுத்துள்ள கோரிக்கைபடி 3 மாத காலஅவகாசம் அளிக்கலாம்" என தமிழக அரசு பதில் அளித்தது. மேலும் உள்ளாட்சி தேர்தல் குறித்த முடிவை மாநில தேர்தல் ஆணையமே எடுக்கலாம் என்றும் தமிழக அரசு அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளது.

எதிர்பார்ப்பு
நாடாளுமன்றத் தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் எப்போது என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது.

ஜூலை 2-ஆவது வாரம்
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் நடத்தலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் ஜூலை 2-ஆவது வாரத்தில் முடிய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications