அடுத்த 5 நாட்களுக்கு.. இந்த 11 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. சூப்பர் அறிவிப்பு
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே மாநிலம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாகக் கடந்த சில நாட்களாகச் சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாகத் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தருமபுரி ஆகிய 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
தலைநகர் சென்னையில் நேற்று முதலே கனமழை பெய்திருந்த நிலையில், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும், வட மேற்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 21ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.