மக்கள் நீதி மய்யத்துக்கு 'டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கீடு.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மக்கள் நீதி மய்யத்துக்கு 'டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியில் வேட்பாளர்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இதேபோல் நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியும் ஒருபக்கம் போட்டியில் நிற்கிறது. இந்த கட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு "டார்ச் லைட்" சின்னத்தை ஒதுக்கி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் 'தேடி_தீர்ப்போம்_வா' என்று பதிவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications