முல்லை பெரியாறு அணை விவகாரம்! சர்வே நடத்தி 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம்கோர்ட் உத்தரவு
சென்னை: முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இந்த விவகாரத்தில் இன்று முக்கிய உத்தரவுகளை சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ளது.
நமது அண்டை மாநிலங்களிடம் இருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய நதி நீரைப் பெறுவதே நமக்கு பெரும் போராட்டமாக இருக்கிறது. காவேரி விவகாரத்தில் பல ஆண்டுகளைக் கடந்து இன்றும் தமிழ்நாடு கர்நாடகா இடையே பிரச்சினை தொடர்ந்து வருகிறது.

அதேபோல முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும் கூட கேரளாவுடன் முற்றிலும் சுமுகமான ஒரு உடன்பாடு ஏற்படவில்லை. அவ்வப்போது இந்த விவகாரத்தில் இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்படும்.
முல்லைப் பெரியாறு அணை வலிமையாக இல்லை என்றும் அதற்குப் பதிலாக புதிய அணையைக் கட்ட வேண்டும் என்பதே கேரள தரப்பின் வாதமாக இருக்கிறது. அதேநேரம் அணை வலிமையாக இருப்பதால் இதெல்லாம் தேவையில்லை என்பது தமிழ்நாடு தரப்பின் பதிலாக இருக்கிறது.
இந்த விவகாரத்தில் இரு தரப்பிற்கும் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் கார் பார்க்கிங் அமைக்க அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் கேரளா தனியாக மனுத்தாக்கல் செய்தது. இதற்கு எதிராகத் தமிழ்நாடு அரசும் மனுத்தாக்கல் செய்தது.
இந்த வழக்கு முன்பு விசாரணைக்கு வந்த போது, கார் பார்க்கிங்கை பொறுத்தவரைக் கூட்டு கணக்கெடுப்பு பணிகளை நடத்துவதே சரியான தீர்வாக இருக்கும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. மேலும், இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டை விளக்கி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை ஒத்தி வைத்தது.
அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் கார் பார்க்கிங் அமையும் இடத்தில் சர்வே நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 1986இல் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி லீசுக்கு வழங்கிய இடத்தில் பார்க்கிங் அமைகிறதா என்று சர்வே நடத்த உத்தரவிட்டது. கூட்டு கணக்கெடுப்பு பணிகளை நடத்துவதே சரியாக இருக்கும் என்று முன்னதாக உச்ச நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சர்வே ஆஃப் இந்தியா அல்லது பிரந்துரை செய்யப்பட்ட அதிகாரிகள் சர்வே நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சர்வே நடத்தி 3 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications