ரெண்டாவதா சொன்னதுதான் நடக்கும் போலயே.. எதுக்கும் அலர்ட்டா இருங்க.. 24 மணி நேரம் பொறுங்க.. வெதர்மேன்
சென்னை: சென்னைக்கு கனமழைக்கான சான்ஸ் கூடிக் கொண்டே இருக்கிறது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Recommended Video
வங்கக் கடலில் அந்தமானுக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த 13 ஆம் தேதி உருவானது. எனினும் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த இரு தினங்களாக சென்னையில் மழையில்லாமல் இருந்த நிலையில் நேற்று பரவலாக மழை பெய்தது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருவள்ளூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் புதிய காற்றழுத்தம் வடதமிழகம் அருகே நகரும் என தெரிவிக்கப்பட்டதால் ஏற்கெனவே மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த காற்றழுத்தம் எப்படி போகும் என்பது குறித்து இரு விதமான யூகங்களை தமிழ்நாடு வெதர்மேன் வகுத்தார்.

குறைந்த காற்றழுத்தம் எங்கே
முதலில் தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் தீவிரமாகி புயலாக மாறி, ஒரே தீவிரத்தன்மையுடன் இருந்தால் அது மேற்பகுதியில் நகர்ந்து மத்திய மற்றும் வடக்கு ஆந்திராவின் மேற்கு, வடமேற்கு திசையில் உயர்ந்த காற்றால் நகரும். இன்னொன்று அந்த குறைந்த காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்தமாகவோ புயலாகவோ மாறினால், அது குறைந்த காற்றழுத்தமாக வலுவிழந்து குறைந்த காற்றால் தெற்கு ஆந்திராவுக்கோ அல்லது வட தமிழகத்திற்கோ செல்லும் என சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.

விஷயம்
இந்த நிலையில் நேற்று முன் தினம் சென்னைக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயத்தையும் பிரதீப் ஜான் தெரிவித்திருந்தார். தெற்கு ஆந்திராதான் ஹாட்ஸ்பாட்டாக உள்ளது. நெல்லூர்- காவாலி இடையே வடசென்னை அருகே மேகக் கூட்டங்கள் குவிந்துள்ளன. இவை வடதமிழகத்தின் பக்கம் நகர்ந்து வந்தால் தற்போதைய சூழலில் சென்னையில் மிகப் பெரிய மழை எல்லாம் இருக்காது. வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் காற்று குவிதலால் மழை மேகங்கள் வடமேற்கு பக்கம் செல்லும். இதில் மேலும் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே தற்போதைய சூழலில் சென்னைக்கு பெரிய மழை என்பதில்லை என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்திருந்தார்.

நிம்மதி பெருமூச்சு
இதனால் சென்னைவாசிகள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் இன்றைய தினம் மேலும் ஒரு பதிவை வெதர்மேன் போட்டுள்ளார். அதில் அனேகமாக நான் கூறிய இரு யூகங்களில் இரண்டாவதுதான் நடக்கும் என்பதுபோல தெரிகிறது. அதாவது வலுப்பெறாமல் குறைந்த காற்றழுத்தமாகவே இருந்து வடதமிழகத்தை நோக்கி நகரும். இது நவம்பர் 18 ஆம் தேதி நடக்கும். இதனால் சென்னைக்கு கனமழைக்கான வாய்ப்பு மெதுவாக அதிகரித்துள்ளது. எனினும் இன்னும் 24 மணி நேரம் போகட்டும் சரியாக சொல்லிவிடலாம்.

எச்சரிக்கை
அதே நேரத்தில் நவம்பர் 7, 11, ஆகிய தேதிகளை போல நவம்பர் 18ஆம் தேதியும் கண்காணிப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது நல்லது. அரபிக் கடலில் உருவான காற்றழுத்தம் நகர்ந்து செல்வதால் கன்னியாகுமரி மற்றும் கேரளாவுக்கு பிரச்சினை இல்லை. அடுத்த இரு நாட்களில் தமிழக உள்மாவட்டங்கள் நல்ல மழையை பெறும். வட தமிழக கடற்கரையோரம் காற்றழுத்தம் வந்துவிட்டால் வரும் 18ஆம் தேதி மழையானது கடலோர பகுதிகளுக்கு சென்றுவிடும் என தெரிவித்துள்ளார். இயற்கையை யாராலும் துல்லியமாக கணிக்க முடியாது. இப்படி போற மாதிரி போய் அப்படி திரும்பிடும்.












Click it and Unblock the Notifications