ஒருபக்கம் மாயவரத்தில் பேய் மழை! மறுபக்கம் நைட் ஷோவுக்கு தயாராகும் கேடிசிசி பெல்ட்! வெதர்மேன் அப்டேட்
சென்னை: மயிலாடுதுறையில் பின்னிபெடலெடுக்கும் மழை பெய்து கொண்டிருக்கும் போதே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு மேககூட்டங்கள் மெல்ல நகர்கிறது என்பதை மறந்துவிடாதீர் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று நள்ளிரவு விடாமல் தொடர்ந்து மழை பெய்தது.
தொடர் மழை காரணமாக இன்றும் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. நேற்று முன் தினம் வரை நவம்பர் 11, 12 தேதிகளுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி தீவிர மழையை எதிர்பார்க்கலாம் என வானிலை மையம் தெரிவித்தது.

தேங்கிய தண்ணீர்
இரவு முதலே பெய்து வரும் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் சேற்றிலும் சகதியிலும் அவதிப்பட்டு வருகிறார்கள். சென்னையின் சில பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. பெரும்பாலான நீர் நிலைகளும் நிரம்பிவிட்டதாகவே கூறுகிறார்கள். இதனால் நீர்நிலைகளின் ஓரமாக வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளார்கள்.

மழை காரணமாக விமானங்கள் தாமதம்
இந்த நிலையில் மழை காரணமாக விமானிகள், ஊழியர்கள் மற்றும் பயணிகள் விமான நிலையத்திற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னையில் இருந்து வெளி நாடுகளுக்கு செல்லக்கூடிய பாங்காக், துபாய், கத்தார், இலங்கை, சிங்கப்பூர் போன்ற விமானங்களும், மும்பை, கொல்கத்தா, அந்தமான், விஜயவாடா, மதுரை, திருச்சி போன்ற உள்நாட்டு விமானங்களும் சுமார் 15 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை காலதாமதமாக புறப்பட்டுச்சென்றன.

சென்னையில் மழை முடியவில்லை
இந்த நிலையில் நாளையும் கனமழை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட மழை அப்டேட்டில் மயிலாடுதுறையில் பேய் மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நள்ளிரவில் வெளுத்தெடுக்க மேக் கூட்டங்கள் மெதுவாக நகர்ந்து வருகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேற்கண்ட இந்த 4 மாவட்டங்களுக்கும் மழை இன்னமும் முடியவில்லை. இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் வானிலை குறித்த அப்டேட்டை கூறியுள்ளார்.

சிகப்பு தக்காளிகள்
சென்னை, புதுச்சேரி, கோவை, தஞ்சை ஆகிய மாவட்டங்களை சுற்றி சிகப்பு தக்காளிகள் சூழ்ந்து கொண்டிருப்பதாகவும் தனியார் வானிலையாளர்கள் தெரிவித்துள்ளனர். சீர்காழியிலும் கனமழை தெறித்து வருவதாக நெட்டிசன்கள் கூறுகிறார்கள். எனவே இங்கும் 24 மணி நேரத்தில் 200 மி.மீ. மழை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் நெட்டிசன்கள் கூறுகிறார்கள். மேலும் மயிலாடுதுறையில் 200 மி.மீ மழை பதிவாக வாய்ப்புள்ளதாக வெதர்மேன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications