மணப்பாறையில் மேக வெடிப்பு போன்றதொரு மழை.. 3 மணி நேரத்திற்கு நகராத மேகங்கள்.. வெதர்மேன் போஸ்ட்
சென்னை: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 274.6 மி.மீ மழை வெறும் 3 மணி நேரத்தில் பெய்துள்ளது. இது மேக வெடிப்பு போன்ற மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த நவம்பர் 7 ஆம் தேதி சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் டெல்டா மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது.
இந்த நிலையில் ஏற்கெனவே உருவான இரு காற்றழுத்தங்கள் சென்னை அருகே கரையை கடந்தன. அந்த வகையில் வங்கக் கடலில் கடந்த 3ஆம் தேதி உருவான ஜாவத் புயல் ஆந்திரா- ஒடிஸா இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த புயல் வலுவிழந்துவிட்டது.

உள்மாவட்டங்கள்
அதிக காற்று காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும் அதிக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

பேஸ்புக் பதிவு
இந்த நிலையில் நேற்றைய தினம் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும் தெற்கு கேரளாவிலும் இடியுடன் கூடிய நல்ல மழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் செவ்வாய்க்கிழமை வரை மேற்கு பகுதி, உள் மாவட்டங்கள், தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை தொடரும்.

மணப்பாறை
புதன்கிழமை முதல் கிழக்கு நோக்கி வீசும் காற்றால் கடலோர பகுதிகளில் டிசம்பர் 8 அல்லது 9 ஆகிய தேதியில் மழை பெய்யக் கூடும். அதே நேரத்தில் அச்சமடையும் அளவுக்கு மழை பெய்யாது என்றும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் மணப்பாறையில் பெய்த மேக வெடிப்பு போன்ற மழை குறித்து தெரிவித்துள்ளார்.

மணப்பாறையில் மேக வெடிப்பு
இதுகுறித்து அவர் கூறுகையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 3 மணி நேரத்தில் 274.6 மி.மீ. மழை பெய்துள்ளது. இது சமவெளிகளில் பெய்த மேக வெடிப்புகளில் ஒன்றாகும். இத்தனை அதிக மழை எதனால் ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். மணப்பாறை பகுதியை விட்டு மேகக் கூட்டங்கள் நகரவே இல்லை. இதே போன்றதொரு சம்பவம் அரியலூர் நகரிலும் கடந்ச சில ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தது. அப்போது 300 மி.மீ. மழை பெய்தது என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications