சென்னையில் மிக விரைவில் அடுத்த மழை தொடங்கும்.. தென் மாவட்டங்களின் நிலை என்ன? தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை: தலைநகர் சென்னையில் அடுத்த மழை மீண்டும் தொடங்கும் எனப் பதிவிட்டுள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென் கேரளா மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்குக் கனமழை பெய்யும் என்றும் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகக் குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
தெற்கு அந்தமானில் நாளை உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியில் ஒரு நாள் தாமதமாக உருவாகும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தலைநகர் சென்னை
இந்நிலையில், தலைநகர் சென்னையில் அடுத்த மழை விரைவில் தொடங்கும் எனத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், "சென்னையில் அடுத்த ஸ்பெல் (மழை) விரைவில் தொடங்கும். சென்னையில் இன்று இரவு முதல் காலை வரை சில இடங்களில் மழை பெய்யும். வரும் டிசம்பர் 1ஆம் தேதி வரை சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்யும். ஆனால் மோசமான கனமழை முடிந்துவிட்டது.
நீர்பிடிப்பு பகுதிகள்
பூண்டி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் பூண்டி ஏரியின் நீர் வரத்து 12000 கன அடியைத் தாண்டியுள்ளது. பூண்டி ஏரியில் இருந்து இப்போது 12000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இது மேலும் அதிகரிக்கலாம். செம்பாரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து தற்போது 5 ஆயிரம் கன அடியாக உள்ளது. அதேபோல வினாடிக்கு 3100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. செம்பரம்பாக்கம் என்பது அடையாறு ஆற்றின் தொடக்கம் அல்ல, கூடுவாஞ்சேரிக்கு அருகிலுள்ள ஆதனூரில் இருந்து வரும் நீர் உள்ளிட்ட சில நீரோடைகளும் அடையாறு ஆற்றின் நீரோட்டத்தில் கலக்கும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
தென்தமிழகம் நிலை
தென் தமிழகத்தில் உள்ள நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற பகுதிகளே அடுத்த 2 நாட்களுக்கு ஹாட்ஸ்பாட்களாக உள்ளன. மாஞ்சோலையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு மணிமுத்தாறு அணை மட்டும் இன்னும் நிரம்பாமல் இருந்தது. அதுவும் அடுத்த 2-3 நாட்களில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளாவில் என்ன நிலை
அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில் கேரளாவில் அடுத்த ஓரிரு நாட்களுக்கு மழை பெய்யும். தமிழகத்தைப் பொறுத்தவரைக் கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல் போன்ற மேற்கு மாவட்டங்களில் அடுத்த 2-3 நாட்களுக்கு மழை பெய்யும்.

வரும் நாட்களில் என்னவாகும்
அடுத்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நன்கு உருவாகி வருகிறது, இது வலுவாக இருந்து. சூறாவளியாக மாறினால் அது மேற்கு-வடமேற்கு பாதையில் ஆந்திராவுக்குச் செல்லும். அதேநேரம் இது வலுவிழந்தால் வட தமிழகத்திற்கு வந்துவிடும். தற்போதுவரை பெரும்பாலான தரவுகள் மத்திய மற்றும் வடக்கு ஆந்திரா பகுதிகளிலேயே மழை பெய்யும் என காட்டுகிறது. இருப்பினும், உறுதியாகக் கூற இன்னும் சில காலம் தேவை. இது ஆந்திராவுக்குச் சென்றால், தமிழகத்திற்கு மழையில் இருந்து ஒரு இடைவெளி கிடைக்கும். இன்றிரவு சென்னையில் ஓரிரு பகுதிகளில் மழை பெய்தாலும் கூட அவை 30 நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கும். மேலும் அது இடத்திற்கு இடம் மாறுபடும்" எனப் பதிவிட்டுள்ளார்.
Recommended Video

மழை அளவு
அதேபோல இன்று மாலை 5.30 மணி வரை மீனம்பாக்கத்தில் 58 மிமீ மழையும் நுங்கம்பாக்கத்தில் 6 மிமீ மழையும் மேற்குத் தாம்பரத்தில் 42 மிமீ மழையும் பதிவாகியுள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார். மேலும், கடலூர் - 70 மி.மீ, பாண்டிச்சேரி - 67 மி.மீ, பாபநாசம் அணை - 60 மி.மீ, மணிமுத்தாறு அணை - 37 மி.மீ, நாகர்கோவில் - 30 மிமீ மழை பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications