இது நம்ம டைம்.. சென்னையில் இன்று விடிய விடிய மழை பெய்யும்.. என்ஜாய்!.. வெதர்மேன்
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பதிவு செய்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் எதிரொலியாக கடந்த புதன்கிழமை இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது.
இதையடுத்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் விடியற்காலை வரை சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது.
இந்திய வானிலை மையம்
இன்று முதல் 3 நாட்களுக்கு அதிக மழை பெய்யும் என இந்திய வானிலை மையமும் சென்னை வானிலை மையமும் தெரிவித்துள்ளது. 10 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.
விடிய விடிய மழை
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பதிவில் கூறியிருக்கையில், இது நமக்கான நேரம். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் மேகக் கூட்டங்கள் சூழ்ந்துள்ளன. இதனால் இந்த 3 மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்யும்.
இன்று இரவு நல்ல மழை
நெல்லை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட இடங்களில் செம மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த மாவட்டங்களில் மட்டுமல்ல பெரும்பாலான மாவட்டங்களில் இன்று இரவு நல்ல மழை பெய்யும்.
செம்ம மழை
அடுத்த 2 நாட்களுக்கு இதே நிலைதான் நீடிக்கிறது. இன்று இரவு வச்சு செய்ய போகுது. வார இறுதி நாட்களை நன்றாக கொண்டாடி மகிழுங்கள் என தெரிவித்துள்ளார் பிரதீப் ஜான்.