காலைல எழுந்ததும் வானம் மேகமூட்டமா இருந்திருக்குமே! சேட் நியூஸ்.. இன்னிக்கு பூரா சூடுதான்.. வெதர்மேன்
சென்னை: இன்று சென்னையில் மழை பெய்யுமா இல்லையா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்டை கூறியுள்ளார்.
தமிழகத்தில் கோடை வெப்பம் கொந்தளிக்கிறது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிக வெப்பம் இருப்பதாகவே கூறுகிறார்கள். இதனால் மக்கள் குடும்பத்தினருடன் மலைவாசஸ்தலங்களுக்கு சென்று மகிழ்கிறார்கள்.

எங்கே போனாலும் வீட்டிற்குத்தானே வரவேண்டும் என நினைக்கும் பலர் எங்கும் செல்லாமல் ஏசி இயந்திரத்தை ஃபுல்டைமாக வேலை வாங்கி வருகிறார்கள். எவ்வளவு நேரத்திற்குத்தான் ஏசியிலேயே உட்கார்ந்திருப்பது, கரன்ட் பில் கையை கடிக்குமே என்ற பயமும் எழுகிறது.
இதற்கெல்லாம் தீர்வாக தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை மக்கள் மனங்களை குளிரவைத்தது. பூமியின் சூட்டை கிளப்பி விடும் அளவுக்கே என்றாலும் சற்று பரவாயில்லை என்றே தோன்றியது. இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மே 29, 30, 31 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 83 டிகிரி முதல் 104 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இன்று குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தின் வானிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மீனம்பாக்கம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகள் மீண்டும் தமிழகத்தின் வெப்பமான இடங்களாக மாறின. இதற்கு காரணம் வடதமிழகமான திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் ஓய்வில்லாமல் வெயில் வெளுத்து வாங்கியதுதான் என்றார்.

அது போல் அவர் இன்னொரு ட்வீட்டில் கூறியிருப்பதாவது: வடக்கு முதல் தெற்கு வரை மேக மூட்டத்துடன் இன்றைய நாள் தொடங்கும். ஆனால் சென்னை நகருக்கு மழையை கொடுக்காது. நேரம் செல்ல செல்ல வெப்பம் அதிகரிக்கும் என வெதர்மேன் கூறியுள்ளார். இதனால் இன்று ஞாயிற்றுக்கிழமை அதுவுமாக மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications